3 நாள் ஆகுது.. கடத்தப்பட்ட இளமதி எங்கே.. வெடித்து கிளம்பும் சேலம் சாதி மறுப்பு திருமண விவகாரம்!
ஈரோடு: 3 நாள் ஆகிறது.. இளமதி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.. சாதி மறுப்பு திருமணம் செய்ததால், பாமகவினரால் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளமதியை மீட்பதில் தொடர் சிக்கல் ஏற்பட்டு வருவதால் அவரை உடனடியாக மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள கிராமம் தர்மாபுரி.. இங்கு வசித்து வருபவர் செல்வன்.. 26 வயதாகிறது.. திராவிடர் விடுதலைக் கழகத்தில் உறுப்பினர் ஆவார்.
Recommended Video
அதே பகுதியை சேர்ந்த இளமதி என்ற 23 வயது பெண்ணை காதலித்தார்.. இருவரும் ஒரே கம்பெனியில் வேலை பார்க்கும்போது காதல் ஏற்பட்டுள்ளது!
உறுப்பினர்
இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்தது.. ஆனால் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை.. அதனால் திராவிடர் விடுதலைக் கழக அமைப்பின் தலைமைக் குழு உறுப்பினரான ஈஸ்வரன் என்பவரை அணுகி தனக்கு கல்யாணம் செய்து வைக்க கோரியுள்ளார். இதையடுத்து சேலத்திலுள்ள கொளத்தூர் அருகே உள்ள காவலாண்டியூர் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் 3 நாளைக்கு முன்பு கல்யாணத்தை நடத்தி வைத்துள்ளனர்.
ஈஸ்வரன்
பிறகு செல்வனும் இளமதியும் அன்றைய தினம் நண்பரை சந்திப்பதற்காக பைக்கில் கிளம்பி சென்றனர்.. அப்போது 50க்கும் மேற்பட்டோர் ஈஸ்வரனை சரமாரியாக தாக்கி வலுக்கட்டாயமாக அவரை காரில் ஏற்றி சென்றுள்ளனர். காரில் அழைத்து செல்லும்போது, செல்வனும் இளமதியும் எங்கே என கேட்டு.. செல்போனை பிடுங்கி... கடுமையாக தாக்கி உள்ளனர்.
பாமக
இதனிடையே கொளத்தூர் அருகே உள்ள உக்கம்பருத்திக்காடு என்ற பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த புதுமண தம்பதியை பாமக மற்றும் கொங்கு அமைப்பை சேர்ந்தவர்கள் வழிமறித்து அவர்களை தாக்கி இளமதியை ஒரு காரிலும், செல்வனை ஒரு காரிலும் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டது.. இதில், இளமதியின் தந்தை பாமகவை சேர்ந்தவராம். இதையடுத்து, கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் திவிகவினர் முற்றுகையிட்டு மணமக்களை மீ்ட்க வேண்டும் என போராட்டம் நடத்தினர்.
மீட்பு?
இளமதியும் செல்வனும் வெவ்வேறு ஜாதியைச் சார்ந்தவர்கள் என்பதால், கலப்புத் திருமணத்தை ஏற்கமுடியாமல் அவர்களை பிரிப்பதற்காக இளமதியின் தந்தையே இப்படி கடத்தி கொண்டு போனதும் விசாரணையில் தெரியவந்தது. இறுதியில் ஈஸ்வரனையும் செல்வனையும் போலீசார் மீட்டனர்... ஆனால் இளமதியை மட்டும் இன்னும் மீட்கவில்லை.. அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.
கோரிக்கை
இந்நிலையில், இளமதியை மீட்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவனும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். "மணமகளை மீட்க அக்கறை காட்டாமல் உள்ளது. சாதிவெறியர்கள் அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை.. அவர் உயிருடன் இருக்கிறாரா என தெரியவில்லை. இதற்கு அமைச்சர் ஒருவரின் தலையீடே காரணம் என தெரிகிறது.. அதனால் முதலமைச்சர் அவர்கள் நேரடியாக இதில் தலையிட்டு இளமதியை மீட்கவும், மணமக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும். கடத்தியவர்களுக்கு துணைபோகும் அமைச்சரை கட்டுப்படுத்த வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
திருமணம்
இதை பற்றி திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி சொல்லும்போது, ''கடந்த 9-ம் தேதி, செல்வனும் இளமதியும் சாதி மறுப்பு சுயமரியாதைத திருமணம் செய்து கொண்டார்கள். அன்று இரவு சாதியக் கும்பல் காதல் தம்பதியினரையும், திருமணத்தை நடத்திவைத்த ஈஸ்வரனையும் அடித்து போட்டுவிட்டு, பெண்ணைக் கடத்தி சென்றுவிட்டார்கள்.
முயற்சி
3 நாள்கள் ஆகியும் பெண் எங்கு, எப்படி இருக்கிறார் என்று இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இதற்குப் பின்னால் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இச்சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியமானவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதால், பெண்ணை மீட்க முடியவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. போலீசார் இன்னும் வேகமாக பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்'' என்றார்.
இளமதி எங்கே
ஆனால் போலீஸ் தரப்போ, "கடத்தப்பட்ட பெண் எங்கு இருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. முக்கியமானவர்கள் கைது செய்யப்படவில்லை என்று யாரை சொல்கிறார்கள் என தெரியவில்லை. அவர்கள் கொடுத்த புகாரில், வீரப்பன் என்ற ஒருவரது பெயர் மட்டும்தான் உள்ளது.. அவர்தான் இளமதியை கூட்டி சென்றதாக கூறப்படுகிறது. அவருடைய செல்போன் சுவிட்ஸ் ஆஃப்பில் உள்ளதால், பெண்ணை தற்போதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.. விரைவில் இளமதியை மீட்போம்" என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண் கடத்தப்பட்டு 3 நாள் ஆன நிலையில் இன்னும் மீட்கப்படாமல் உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது!