நீங்கதான் தெய்வம்.. துப்புரவு பணியாளர்களின் பாதங்களை கழுவி அத்தியாவசியப் பொருட்களை வழங்கல்
ஈரோடு: ஈரோட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து, மக்களை பாதுகாக்க தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் சமூக அக்கறையுடன் பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை கழுவி, அவர்களுக்கு தேவையான அத்தியா
ஈரோடு: ஈரோட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து, மக்களை பாதுகாக்க தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் சமூக அக்கறையுடன் பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை கழுவி, அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நாட்டில் இதுவரை 8,356 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 273 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு குறையாததால் நாடு முழுவதும் ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கினால், பலர் வேலையின்றி, அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்துகொள்ளமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனிடையே வறுமையில் வாடும் ஏழை குடும்பங்கள், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள், சமூக அமைப்புகள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் மாநில பேரிடர் நிதியிலிருந்து ஏழை மக்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசுகள் செய்து வருகின்றனர்.
இதேபோல் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து, மக்களை பாதுகாக்க தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் சமூக அக்கறையுடன் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு தேவையான உதவிகளையும் சமூக அமைப்புகள் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், காக்கும் கரங்கள் என்ற சமூக அமைப்பினர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களின் பாதங்களை கழுவி அரிசி, சோப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை இலவசமாக வழங்கியுள்ளனர். மேலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை எதிரே சாலையோரம் தங்கியிருந்த 80 க்கும் மேற்பட்டோருக்கு தங்குவதற்கு இடமளித்து, அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கி வருகின்றனர். தொடர்ந்து ஊரடங்கு காலம் முடியும் வரை துப்புரவு பணியாளர்கள், நரிக்குறவர்கள் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க உள்ளதாகவும் அந்த அமைப்பின் தலைவர் எரிக் தெரிவித்துள்ளார்.