முருகனுக்கு அரோகரா... மகிழ்ச்சியில் பூரிக்கும் பூ விவசாயிகள்
சத்தியமங்கலம்: தைப்பூசம் நெருங்குவதால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூஜைக்கு தேவையான பூக்களின் விலை உயர்வு. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பவானிசாகர், சிக்கரசம்பாளையம், புஞ்சை புளியம்பட்டி, அரியப்பம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மல்லிகை, முல்லை, செண்டுமல்லி, கோழிக்கொண்டை, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு விதமான மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் தைப்பூச பண்டிகை நெருங்குவதால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூஜைக்கு தேவையான பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இன்று மல்லிகை பூ கிலோ ரூ. 1600 க்கும், முல்லை ரூ. 1500 க்கும், செண்டுமல்லி ரூ. 75 க்கும், கோழிக்கொண்டை ரூ.125 க்கும், சம்பங்கி ரூ.70 க்கும் விற்பனையானது.
பூக்களின் விலை அதிகரித்ததால் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்னும் இரண்டு தினங்களுக்கு பூக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.