பள்ளி மாணவர்கள் ‘யூ டியூப்’ மூலம் பாடம் படிக்க ஏற்பாடு... அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்
ஈரோடு: மாணவர்கள் 'யூ டியூப்' மூலம் பாடம் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல், பள்ளிக் கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. பாடத்திட்டங்கள் மாற்றம், ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றம் என பட்டியல் நீளுகிறது.
இந்தநிலையில், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் 2 ஆயிரத்து 6 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி, அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள 1,000 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் அடல் டிங்கர் லேப் வசதி செய்து தரப்படும். மாணவர்கள் 'யூ டியூப்' மூலம் பாடம் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
70 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்க முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை புதிய வண்ண சீருடைகள் படிப்படியாக வழங்கப்படும். 2017- 2018-ம் ஆண்டில் விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி 2 மாத காலத்தில் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், கல்விக்கான புதிய தொலைக்காட்சி சேனல் விரைவில் தொடங்கப்படும். நிதி பற்றாக்குறை இருந்தாலும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகளில் 72 ஆயிரம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் கூடுதலாக 2 லட்சம் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக தமிழ்நாட்டில் 413 இடங்களில் இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. எனவே சென்னையில் உள்ள பள்ளிகளில் குடிநீர் பிரச்னை இருந்தால், உடனே தகவல் தெரிவிக்கலாம், அந்த பள்ளிகளுக்கு 24 மணி நேரத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பள்ளிகளுக்கு தேவையான குடிநீர் வாங்க பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நிதி ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலம் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் குடிக்க, கழிவறைகளில் பயன்படுத்த தண்ணீர் கிடைக்க வழி செய்யப்படும் என்றும் கூறினார்.