பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியீடு.. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு: ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
ஆனால் தொடர்ந்து நாடு முழுவதும் மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. எனினும் பத்தாம் வகுப்பு தேர்வு உறுதியாக நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் ஊரடங்கு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில்
ஈரோடு மாவட்டம் கோபியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தாக்கம் குறைந்தவுடன் ஜூன் மாதத்தின் 3வது வாரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை தமிழக முதல்வரிடம் அனுமதி பெற்று வெளியிடப்படும்.
மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் மாதத்தில் தொடங்கும்" என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி பயில கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்களைத் தொடர்ந்து கற்பிக்கும் பணிகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.
தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு மாதிரி வினாத்தாள், பாடங்களின் முக்கிய பகுதிகள் ஆகியவற்றிற்கான வீடியோக்களை கல்வித் தொலைக்காட்சி தயாரித்துள்ளது.
10-ம் வகுப்பு பாடங்களுக்கான வீடியோக்கள் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ யூ டியூப் சேனலான kalvitvofficial என்ற தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை பார்த்து பயன்பெறலாம்.