கணவருக்காக மது வாங்க சென்ற பெண்... வியப்பை ஏற்படுத்திய அந்தியூர் டாஸ்மாக்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் டாஸ்மாக்கில் கணவருக்காக வரிசையில் நின்று பெண் ஒருவர் மது வாங்கிச் சென்றது அப்பகுதியில் பேசு பொருளாக உள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் வழக்கத்திற்கு மாறாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கட்டி ஏறியது. வயதுவாரியாக நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் மது வாங்க வர வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து அந்தாணி செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக்கிற்கு 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது எதார்த்தமாக டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், டாஸ்மாக் வரிசையில் பெண் நிற்பதை கண்டு திகைத்து போனார். அவர் அருகே சென்று, எதற்காக நீங்கள் இங்கு நிற்கிறீர்கள் என ஆட்சியர் வினவ, அதற்கு பதிலளித்த அந்த பெண் எனது கணவருக்காக மது வாங்கி செல்ல வந்திருக்கிறேன். அவருக்கு நடக்க முடியாததால் வீட்டில் இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மது வாங்க பணம் ஏது, வேலைக்கு தான் செல்லவில்லையே என ஆட்சியர் கதிரவன் மீண்டும் கேட்டிருக்கிறார். தமிழக அரசு ரூ.1000 நிவாரணத் தொகை தந்ததாகவும் அந்த பணத்தில் மது வாங்க வந்ததாகவும் அந்த பெண்மணி கூறியிருக்கிறார். இந்த பதிலை கேட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அவருடன் சென்றிருந்த அதிகாரிகள் அழுவதா சிரிப்பதா எனத் தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துள்ளனர்.
Mothers day: கண்ணே...மணியே.. என்றெல்லாம் அம்மா கொஞ்சமாட்டார்... நினைவுகளை அசைபோடும் சுஜாதாபாபு
மதுவில்லாமல் தனது கணவனால் இருக்க முடியாது என்றும், அவரை வெளியேவிட்டால் மது அருந்திவிட்டு சாலைகளில் விழுந்துகிடப்பார் என்பதால் அதை தவிர்ப்பதற்காக வேறு வழியின்றி டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளதாக அந்த பெண் கூறினார். இதனிடையே மாவட்ட ஆட்சியர் கதிரவன் தனது ஆய்வை பாதியிலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.