அடுத்தடுத்து மாஸ் காட்டி வரும் தோப்பு வெங்கடாச்சலம்.. தொகுதி மக்கள் ஹேப்பி!
பெருந்துறை எம்எல்ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
ஈரோடு: நலத்திட்ட உதவி, விலையில்லா செல்போன் என அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமாக இறங்கி வருகிறார் முன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம்!
சமீபகாலமாகவே அதிமுகவில் மாஸ் காட்டி வருகிறார் பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம். கட்சியில் இவர் ஒரு சீனியர்.. எனினும் 2 வருஷத்துக்கும் மேலாக அமைச்சர் பதவிக்காக முயன்று வருகிறார். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.
இதனால் எம்பி தேர்தலுக்கு பிறகு, இவர் வேறு கட்சிக்கு தாவ போகிறார் என்றெல்லாம் செய்திகள் பரபரத்தன. ஆனால் இந்த எல்லா யூகங்களும் தவிடு பொடியாகின. இன்னும் சொல்ல போனால், நடந்து முடிந்த எம்பி தேர்தலில் முடிவினால்தான், தோப்பு வெங்கடாச்சலம் தரப்பு உற்சாகமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
கோபிசெட்டிபாளையம், பவானி தொகுதியைவிட, தன்னுடைய பெருந்துறை தொகுதியில் திமுகவின் வாக்குகள் குறைவாக பதிவாகி இருந்தது. இதுதான் தோப்பு வெங்கடாசலத்தின் உற்சாகத்துக்கு காரணம். அது மட்டுமில்லை... இதுவரை தொகுதிக்குள் செய்த நலத்திட்டங்கள், மக்களிடம் பழகும்முறை, உள்ளிட்டவைகளால்தான் பெருந்துறையின் பெரும்பாலான வாக்கு சதவீதத்தை தன்னிடம் தக்க வைத்து கொள்ள முடிந்ததாக கூறப்படுகிறது.
எனவே விரைவில், அதிமுகவில் இவரது செல்வாக்கு மேலும் உயரும் என்றும் இப்போதே பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும், வழக்கம்போல தன்னுடைய தொகுதி மக்களுக்கு அடுத்தடுத்த நலத்திட்ட உதவிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம் தோப்பு.
நேற்றுகூட, 108 அங்கன்வாடி பணியாளர்களுக்கு பிரதம மந்திரியின் போஷன் அபியான் திட்டத்தின்கீழ் விலையில்லா கைபேசி வழங்கினார். மொடக்குறிச்சி எம்எல்ஏ வி.பி.சிவசுப்ரமணியன் முன்னிலை நடந்த இந்த விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள். ஆக மொத்தம்.. கூடிய சீக்கிரம் தோப்பு வெங்கடாச்சலம் கட்சிக்குள் முக்கிய பொறுப்புடன் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.