குழந்தைகளை தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்.. தமிழகத்தில் மீண்டும் பரவி வருவதால் அதிர்ச்சி
ஈரோடு: தொண்டை அடைப்பான் நோய் தமிழகத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக சுகாதாரத்துறை அறிவித்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் அந்நோய்க்கு ஒரு உயிர்பலி ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலையில் உள்ள மல்லியம் துர்கம் என்ற கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் காசி பிரசாத்துக்கு, கடந்த சில தினங்களாக இருமல் சளியுடன் தொண்டை வலியும் இருந்துள்ளது. மருத்துவர்கள் பரிசோதித்ததில் அச்சிறுவனுக்கு தொண்டை அடைப்பான் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துவிட்டான். மேலும் கடம்பூர் மலை பகுதியிலுள்ள கிராமங்களில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தொண்டை அடைப்பான் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.
கார்னி பாக்டீரியம் டிப்தீரியா எனும் பாக்டீரியா மூலம் ஏற்படும் தொண்டை அடைப்பான், குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நோயாகும். இந்நோய் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அதிகம் தாக்குவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நோய் தாக்கும் குழந்தைகளின் தொண்டையில் சிறிய ஜவ்வு போன்று ஒரு படலம் உருவாகும்.
நாளாக நாளாக இந்த ஜவ்வானது வீங்கி தொண்டையை அடைக்கும், உணவை சாப்பிடவும் முழுங்கவும் முடியாமல் போய்விடும். நாளடைவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்படும். இறப்பை ஏற்படுத்தும் இந்த நோய் 50 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டுப்படுத்தப்பட்டு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக சுகாதாரத்துறை கூறிவந்தது. இந்நிலையில் மீண்டும் தாக்கி சிறுவன் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபற்றி தகவல் தெரிவித்துள்ள எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை நிர்வாகம், பலஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் தொண்டை அடைப்பான் நோய் பரவி வருவதாக எச்சரித்துள்ளது.
முறையான தடுப்பூசி போடாததால் இந்நோயின் தாக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். இந்த நோய்க்கான தடுப்பூசி அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 6-வது வாரம், 10-வது வாரம், 14-வது வாரம் மற்றும் ஒன்றரை வயதில் குழந்தைகளுக்கு முறையான தடுப்பூசி போடுவதன் மூலம் இந்நோயை தடுக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.