ஒரு நல்லதும் செய்யல.. இப்போது மரியாதையையும் இழந்து வருகிறார் வைகோ.. வானதி சீனிவாசன் பாய்ச்சல்
பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் வைகோவை விமர்சித்துள்ளார்.
ஈரோடு: "வைகோ எம்பியாக இருந்த காலத்தில் இருந்தே எந்த ஒரு நல்லதும் செய்யவில்லை. இப்போது பிரதமர் மோடி வருகைக்கு கருப்பு கொடி காட்டுவதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தனது மரியாதையை இழந்து வருகிறார்" என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
நாளை காலை பாஜக தலைவர் அமித்ஷா ஈரோடு வர உள்ளார். அங்கு நெசவாளர்களுடன் கலந்துரையாடலும் நடத்த போகிறார். இதையடுத்து விழாவுக்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன.
இதனை பார்வையிட வந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமித்ஷா வருகை குறித்தும், அவர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் குறித்தும் விளக்கமாக தெரிவித்தார்.
தொண்டர்கள் உற்சாகம்
பிரதமர் மோடி திருப்பூர் வருகையின்போது, பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர் என்றும் இது தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது என்றும் கூறினார். இதையடுத்து, பிரதமர் மோடிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருப்பு கொடி போராட்டம் நடத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மரியாதையை இழக்கிறார்
அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "வைகோ எம்பியாக இருந்த காலத்தில் இருந்தே எந்த ஒரு நல்லதும் செய்யவில்லை. பிரதமருக்கு வைகோ கருப்புக்கொடி காட்டுவதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அவர் தனது மரியாதையை இழந்து வருகிறார்.
வேதனையாக உள்ளது
ஒருகாலத்தில் பெரும் தலைவராக இருந்த வைகோ இப்போது, சின்ன சின்ன குழுக்களுக்கு தலைவராக இருப்பது வேதனையாக இருக்கிறது.
கருப்பு கொடி
இதே வைகோதான் 5 வருடங்களுக்கு முன்பு மோடிதான் பிரதமராக வரவேண்டும் என்று சொன்னார். இலங்கை பிரச்சனை, மீனவர் பிரச்சனை என தீர்த்து வைத்துள்ள பிரதமருக்கு, வேறு வழியில்லாமல் வைகோ கருப்பு கொடி காட்டி வருகிறார்" என்றார்.