தமிழக எல்லைக்குள் நுழைந்து தமிழ் பெயர்ப் பலகையை அடித்து உடைத்து வாட்டாள் நாகராஜ் ரவுடித்தனம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழக எல்லைக்குள் நுழைந்து நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பெயர் பலகையை அடித்து உடைத்து ரவுடித்தனத்தில் ஈடுபட்டதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்த போராட்டம் குறித்து தாளவாடி காவல்துறை விசாரித்து வருகிறது.
Recommended Video
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது தாளவாடி மலைப்பகுதி. தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதியில் ராமாபுரம் என்ற இடத்துடன் தமிழக எல்லை முடிகிறது.
எல்லை முடிகின்ற ராமாபுரத்தில் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மாநில எல்லை முடிவு என எழுதப்பட்ட பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கிறது.
பெயர்பலகை உடைப்பு
இந்த நிலையில் கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நேற்று மாலை தமிழக-கர்நாடக எல்லைக்கு வந்த கன்னட அமைப்பினர் நெடுஞ்சாலைத்துறையின் பெயர் பலகையில் எழுத்துக்கள் கன்னட மொழியில் எழுதப்படவில்லை எனக்கோரி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பெயர் பலகைகளை அடித்து உடைத்து ரவுடித்தனம் செய்தனர்
எழுத்துக்கள் கிழிப்பு
ஆவேசத்துடன் நெடுஞ்சாலைத்துறையின் பெயர் பலகையில் உள்ள எழுத்துக்களின் ஸ்டிக்கர்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழக எல்லைக்குள் நுழைந்து தமிழக அரசுக்கு சொந்தமான நெடுஞ்சாலைத் துறையின் பெயர் பலகைகளை வாட்டாள் நாகராஜ் சேதப்படுத்திய விவகாரம் குறித்து தகவல் அறிந்து வந்த தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழர்களுக்கு எதிரான போராட்டம்
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நதி பிரச்சனை, கன்னட மக்கள், மொழி போன்றவற்றை கையில் எடுத்து அரசியல் செய்து வந்தவர் வாட்டாள் நகராஜ். கன்னடத்திற்காகவும், கன்னட மக்களுக்காகவும் குரல் கொடுப்பவராக சொல்லிக்கொள்பவர். இவர் சாம்ராஜ் நகர் முன்னாள் எம்எல்ஏவான இவர் காவிரி பிரச்சனைகளின் போது, தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர். கடந்த காலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த சரக்கு வாகனங்கள் மீது இவரது ஆதரவாளர்கள் தான் தாக்குதல் நடத்தினார்கள்
மீண்டும் போராட்டம்
பொதுவாகவே காவிரி நீர் போராட்டம் தொடங்கி, தமிழகத்திற்கு எதிராக பல்வேறு விவகாரங்களில் வாட்டாள் நாகராஜ் போராட்டம் நடத்தி வருகிறார். காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில ஆண்டுக்கு முன்பு வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட சலுவளி கட்சி பெங்களூரு, மைசூரு பகுதியில் நடத்திய போராட்டம் பெரும் கலவரத்தில் முடிந்தது. கடந்த தேர்தலில் வாட்டாள் நாகராஜ் படுதோல்வி அடைந்தார். சில காலம் அமைதியாக இருந்தவர் தற்போது மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.