சமூக விரோத சக்திகள் திமுக கூட்டணியில் பாமகவை இணைத்து வெற்றியை தடுக்க சதி .. விசிக புகார்
ஈரோடு: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் வெற்றியை தடுப்பதற்காக சில சமூக விரோத சக்திகள், திமுக கூட்டணியில் பாமகவை இணைத்து திமுக கூட்டணியின் வெற்றியைத் தடுக்க நினைத்தார்கள் என விசிக மாநில துணை பொதுச்செயலாளர் கனிஅமுதன் பேசியுள்ளார்.
ஈரோட்டில் மண்டல அளவிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விசிக மாநில துணை பொதுச்செயலாளர் கனிஅமுதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் "நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை எளிய மக்களை பாதுகாக்கும் அரணாக அமைக்கப்பட்ட திமுக தலைமையிலான கூட்டணி தேனி நாடாளுமன்றத் தொகுதியை தவிர 38 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
ஆனால். நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்த அதிமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது . இதற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பும் காரணம்.
தேர்தலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட திமுக கூட்டணியில் சில சக்திகள் பாட்டாளி மக்கள் கட்சியை இணைத்து அக்கட்சிக்கு இருக்கும் அவப்பெயரின் மூலம் திமுக பெற இருந்த வெற்றியை தகர்க்க நினைத்தார்கள். இதனை அறிந்ததனால் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சாணக்கிய தனமாக கூட்டணி அமைத்தார்.
இந்த மதசார்பற்ற திமுக தலைமையிலான கூட்டணி, போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றியைப் பெற்றது. இதன்மூலம் நாடாளுமன்றத்தில் தமிழக மக்களுக்கான குரலை எழுப்பும் சக்திவாய்ந்த கூட்டணியாக திமுக கூட்டணி அமைந்துள்ளது. இந்த பெருமை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவனையே சேரும்" இவ்வாறு கூறினார்.