Viral Video: ஜஸ்ட் மிஸ்.. அதுங்க பாட்டுக்குத்தானே நின்னுச்சு.. மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்!
2 இளைஞர்களை யானைகள் விரட்டியதால் சத்தியமங்கலம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது
Recommended Video
சத்தியமங்கலம்: யானைங்க பாட்டுக்கு அமைதியாகதான் நின்று கொண்டிருந்தன.. அந்த யானைகளை 2 இளைஞர்கள் வீடியோ எடுக்க போய், சீண்டி விட்டுவிட்டதால் சத்தியமங்கலம் ரோடே களேபரமாகிவிட்டது!
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த யானைகள் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் பகல் நேரங்களில் நின்றபடி தீவனம் உட்கொள்வதோடு அவ்வப்போது சாலையை கடந்தும் செல்கின்றன.
இப்படி யானைகள் அடிக்கடி செல்வதால், சாலையில் வாகன ஓட்டிகள் செல்போனில் போட்டோ, வீடியோ எடுக்க முயற்சிக்கின்றனர்.
வேண்டுகோள்
இப்படியெல்லாம் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது, யானைகளை தொந்தரவு செய்தால் ஆவேசப்பட்டு துரத்தும், தாக்கவும்கூடும் என்று பலமுறை வனத்துறையினர் சொல்லி விட்டார்கள். ஆனாலும் ஒருசிலர் இந்த வேண்டுகோளை மதிப்பதே இல்லை.
யானைகள் கூட்டம்
நேற்று சாயங்காலமும் இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே சாலையில் யானைகள் நடமாடியபடி இருந்தன. அப்போது 2 இளைஞர்கள் பைக்கில் சென்றனர். அந்த யானை கூட்டத்தில் குட்டியுடன் 2 யானைகள் நின்றிருந்ததால், அருகில் சென்று அதனை செல்போனில் வீடியோ எடுக்க முயன்றனர்.
ஆவேசம்
குட்டியை ஏதாவது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்திலும், பீதியிலும் ஆவேசப்பட்ட 2 யானைகளும், இளைஞர்கள் அருகில் வந்தன. இதை பார்த்துபதறி போன இளைஞர்கள் பைக்கை கிளப்பிக் கொண்டு வேகமாக பறந்தனர். ஆனால் இளைஞர்களை ஆத்திரத்துடன் யானைகள் துரத்தியது. இன்னும் சொல்லப்போனால் மயிரிழையில் யானைகளிடமிருந்து 2 பேரும் தப்பித்தனர்.
கோரிக்கை
இவ்வளவு நடந்தும் இதனையும் யாரோ வீடியோ எடுத்து இணையத்தில் போட்டுவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இனியும் யானைகளை இப்படி தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.