இன்னும் ஒரு அடி தான்.. கடல் போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணை.. விவசாயிகள் ஹேப்பி
ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை தொட்டவுடன் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 101 அடியாக உள்ளது.
Recommended Video
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் பலத்த மழை பெய்வதால் கடந்த 3 நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 99 அடியிலிருந்து 101 அடியாக உயர்ந்துள்ளதால் அணை நீர்த்தேக்கம் கடல் போல் காட்சியளிக்கிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.32 அடியாகவும், நீர் இருப்பு 29.7 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 9723 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 3050 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையில் அக்டோபர் மாத இறுதிவரை 102 அடி வரை மட்டுமே தேக்கி வைக்க முடியும் என்ற விதிமுறை உள்ளதால் அணையின் நீர்மட்டம் 102 அடியை தொட்ட உடன் பவானிசாகர் அணையிலிருந்து மேல் மதகுகள் வழியாக பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும்.
போதைப் பொருள் சர்ச்சை.. 'வாட்ஸ் அப்' ஆல் சிக்கிய தீபிகா படுகோன்!.. கங்கனா ரணாவத் செம்ம நக்கல்!
இதன் காரணமாக பவானி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு பவானிசாகர் பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் பவானி ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட உள்ளதால் ஆற்றில் குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.