அணிலாக இருப்பேன்.. இளங்கோவன் வெற்றிக்காக உழைப்பேன்! அன்று சீட் கேட்டு அழுதாரே.. அதே மக்கள் ராஜன்தான்
ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலுக்குக் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் தேர்வு நடந்த போது, அக்கட்சியின் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் சீட் கேட்டு செய்தியாளர்களிடம் கண் கலங்கியிருந்தார். இதனிடையே இப்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வெற்றிக்காக உழைப்பேன் என்று அவரே தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பு அமைதியாக இருந்த தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஆளும் தரப்பும் எதிர்க்கட்சிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் இறங்கியுள்ளது.
கடந்த முறை இந்த தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கே ஈரோடு கிழக்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல திமுக தரப்பில் பிரசாரமும் தொடங்கப்பட்டுவிட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி.. இரட்டை இலை முடங்குமா? ஓபிஎஸ் பரபர பேச்சு
மக்கள் ராஜன்
காங்கிரஸ் சார்பில் வேட்பாளரைத் தேர்வு செய்யச் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இரு நாட்கள் ஆலோசனை நடந்த நிலையில், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜனும் சீட் பெற முயன்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதல் முறையாகச் சத்திய மூர்த்தி பவனில் தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை சந்தித்ததில் மகிழ்ச்சி. எனக்குக் கட்டாயமாக வேட்பாளராகப் போட்டியிட இடம் வேண்டும் என்று கேட்டுள்ளேன். காங்கிரசை வளர்க்க நான் நிறைய இழந்துள்ளேன்.
கண்கலங்கிய மக்கள் ராஜன்
நான் கட்சிக்கு வேலை செய்யவில்லை என்று யாராலும் என்னைச் சொல்ல முடியாது. எனக்குத் தாய் தந்தை இருவரும் கிடையாது.. நான் கடினமாக இந்த காங்கிரஸ் கட்சிக்காக உழைத்துள்ளேன்.. இதனால் நிறைய இழந்துள்ளேன்" என்று கூறி கண்கலங்கினார். இந்தச் சூழலில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவேராவின் தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனைக் காங்கிரஸ் மேலிடம் வேட்பாளராக அறிவித்தது. இந்தச் சூழலில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் ராஜன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
வாய்ப்பு கேட்டேன்
இதனிடையே நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் ராஜன், "திருமகன் ஈவேரா மறைவின் வடுவே இன்னும் எங்களுக்கு ஆரவில்லை. இந்தச் சூழலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட நான் வாய்ப்பு கேட்டேன்.. காங்கிரஸ் ஜனநாயக இயக்கத்தில்தான் அனைவராலும் போட்டியிட வாய்ப்பு கேட்க முடியும்.. அதன் அடிப்படையில் தான் நான் அகில இந்திய பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து வாய்ப்பு கேட்டேன். இப்போது முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அணிலாக உழைப்பேன்
இதனால் மனம் வேதனைப் பட்டாலும்.. கை சின்னம் போட்டியிடுகிறது என்பதால் காங்கிரஸுக்கு எந்தவொரு களங்கமும் ஏற்படாத வகையில் வெற்றிக்கு அணிலாக உழைப்பேன். வீடு வீடாகச் சென்று ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு கேட்பேன். நாங்கள் ஜனநாயகத்தில் வழிவந்தவர்கள். நான் ஒருபோதும் காங்கிரஸ் கட்சிக்குத் துரோகம் செய்ய மாட்டேன்.. இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய வெற்றியைக் காங்கிரஸ் இந்த இடைத்தேர்தலில் அடையும்.
அண்ணாமலை மீது அட்டாக்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எந்தவொரு விஷயத்தையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் அரைவேக்காடாகப் பேசுகிறார். ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அவர் சென்னையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பதாகவும் ஆனால், ஈரோட்டில் சொந்த கட்சியிலேயே ஒரு மாவட்ட தலைவரின் ஆதரவு இளங்கோவனுக்கு இல்லை என்றும் சம்மந்தபே இல்லாமல் பேசியுள்ளார். நான் காங்கிரஸ் கட்சிக்கு 30 ஆண்டுகள் உழைத்துள்ளேன். இதனால் ஜனநாயக அடிப்படையில் வாய்ப்பு கேட்டேன்.
அழுதது ஏன்
கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதை ஏற்று 'கை' சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பேன். காங்கிரஸ் வெற்றியில் எனது ஒத்துழைப்பும், எனது தெற்கு மாவட்ட ஒத்துழைப்பும் 100% இருக்கும். நான் வாய்ப்பு கேட்டு அழவில்லை. தாய், தந்தை என்னுடன் இல்லாத இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி தான் என்னுடைய தாய், தந்தை போல நினைத்துக் கொண்டு இருக்கிறேன். இதனால் தான் கொஞ்சம் எமேஷ்னல் ஆகி அழுதுவிட்டேன்.. இதில் வேறு எந்த காரணமும் இல்லை.. அடுத்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்குமா என்பது பற்றித் தெரியாது." என்றார்