கடுமையான போட்டி.. அதிமுக வேட்பாளர் அறிவிப்பதற்கு தாமதமாக காரணம் இதுதான்.. எஸ்பி வேலுமணி பேச்சு!
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட அதிகமானோர் முன் வந்த காரணத்தால் மட்டுமே, வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அளவிற்கு தைரியமான தலைவர் இல்லை என்று கூறிய எஸ்.பி.வேலுமணி, அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து அக்கட்சியின் வேட்பாளர் தென்னரசை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதில் திமுக கூட்டணி சார்பாக மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நாள் குறித்த காங்கிரஸ்.. பிப்.3ல் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல்?
பாஜக கருத்து
அதேபோல் அமமுக, தேமுதிக, நாம் தமிழர் உட்பட ஏராளமான கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளனர். ஆனால் அதிமுக வேட்பாளர் அறிவிக்க தாமதமாகி வந்தது. இதனிடையே நேற்று பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும் என்று நாராயணன் திருப்பதி கூறியிருந்தார். இதனால் அதிமுகவின் வேட்பாளர் அறிவிப்பு எப்போது என்று தெரியாமல் இருந்தது.
அதிமுக வேட்பாளர் தென்னரசு
இந்த நிலையில் அதிமுகவின் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று காலை திறக்கப்பட்ட தேர்தல் பணி மனை திறப்பு விழாவில் அதிமுகவினருக்கு கே.எஸ்.தென்னரசு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இவர் ஈரோடு மாவட்ட மாநகர் எம்ஜிஆர் மன்ற செயலாளராக உள்ளார்.
ஏன் தாமதம்?
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 50 ஆயிரம் வாக்குகள் வெற்றிபெறுவார்கள் என்பது உறுதி. அதிமுகவில் போட்டியிட ஆளில்லை, சீட் கேட்டு யாரும் முன்வரவில்லை என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் உண்மையில், போட்டியிட அதிகமானோர் முன் வந்ததால் மட்டுமே, வேட்பாளர் அறிவிப்பதற்கு தாமதமாகியது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கு கடுமையான போட்டி நிலவியது.
தைரியமான தலைவர்
அதேபோல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவருடனும் கலந்து பேசி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்றைய சூழலில் எடப்பாடி பழனிசாமி அளவிற்கு தைரியமான தலைவர் யாருமில்லை. நான்கரை ஆண்டு காலமாக சிறப்பான ஆட்சியை நடத்தி காட்டியவர். அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து வெற்றிபெற வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.