தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட புதிய தகவல்
ஈரோடு: பள்ளிகள் திறப்பு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் அது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்று விளக்கம் அளித்தார்.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்த மார்ச் மாதத்தில் மத்திய அரசு உடனடியாக லாக்டவுடன் அறிவித்தது. அதற்கு முன்னதாக கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 2வது வாரத்தில் இருந்து முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.
பொதுபோக்குவரத்தை தடை செய்த அரசு, சுமார் 5 மாத காலத்திற்கு பிறகு கடந்த மாதம் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தது. கடந்த 6 மாதத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்து இதுவரை சரியான தகவல்கள் வெளியாகவில்லை.
கல்லூரி திறப்பு
மத்திய அரசு அன்லாக் 5.0 வை அறிவித்த நிலையில், அதிலும் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதேநேரம் கல்லூரிகள் விஷயத்தில் நவம்பர் 1ம்தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கலாம் என்று கூறப்பட்டது. எனினும் வகுப்புகள் திறக்கப்படுமா இல்லையா என்பது தெளிவான அறிவிப்பு இதுவரை வரவில்லை.
அரசுகள் ஆலோசனை
மத்திய அரசு, UNLOCK 5.0 இன் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர இதர பகுதிகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளதுடன், பள்ளி, பயிற்சி நிறுவனங்களை பகுதி வாரியாக திறப்பது குறித்து அக்டோபர் 15ஆம் தேதிக்கு மேல் மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது.
திடீரென ரத்தான அறிவிப்பு
பள்ளிகள் திறப்பிற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. தமிழக அரசு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 9 - 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என கூறி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்கு பின்னர் திடீரென அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. அதேநேரம் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் பள்ளிகளை திறந்தன.
அமைச்சர் அளித்த பதில்
இந்த நிலையில், ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு உதவி திட்டப்பணிகளை வழங்கினார். அப்போது தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. அது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்று விளக்கம் அளித்தார். இதன் மூலம் பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.