10, 12ம் வகுப்புகள் திறப்பு ஓகே.. மற்ற வகுப்புகள் எப்போது திறக்கப்படும்? செங்கோட்டையன் பதிலை பாருங்க
ஈரோடு: தமிழகத்தில், ஆய்வுக்கு பிறகு அனைத்து வகுப்புகளும் படிப்படியாக திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வரும் 19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்கப்படும் போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும் அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
1 டோஸ் 200 ரூபாய்... 4.50 கோடி கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளை ரூ.1,176 கோடிக்கு வாங்கும் மத்திய அரசு
நோய் எதிர்ப்பு சக்தி
அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
செங்கோட்டையன் பேட்டி
இந்த நிலையில், ஈரோட்டில் இன்று நிருபர்களை சந்தித்தார், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அப்போது அவர் கூறியதாவது: முதல் கட்டமாக திறக்கப்படும் 10,12ம் வகுப்புகளுக்காக 6,029 பள்ளிகள் தயாராக உள்ளன. விருப்பமுள்ள 10,12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்.
மாணவர்கள் விருப்பம்
98 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வரவிரும்புகிறார்கள். எனவேதான் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் மருந்துகளை மாணவர்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் பள்ளிக்குச் செல்லலாம்.
பிற வகுப்புகள் திறப்பு
பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் முதலில் பள்ளிக்கு வரட்டும். இதற்கு பிறகு, ஆய்வு செய்து படிப்படியாக பிற வகுப்புகளும் திறக்கப்படும். பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பிறகு பள்ளித் தேர்வு குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.