விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டும் வியாபாரிகள்... தோட்டம் டூ மார்க்கெட்... இவ்வளவு விலையா?
ஈரோடு: ஊரடங்கை பயன்படுத்தி விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை வாங்கும் வியாபாரிகள் அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதாக புகார் எழுந்துள்ளது.
விளைபொருட்களை தோட்டத்தில் சொற்ப விலை கொடுத்து வாங்கி அதை மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று 6 முதல் 8 மடங்கு வரை லாபம் வைத்து விற்பதாக விவசாயிகள் தரப்பில் வேதனை தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உற்பத்தியாளர்களான விவசாயிகளும் லாபம் ஈட்ட முடியாத நிலை தான் பரவலாக காணப்படுகிறது.
தமிழக கர்நாடக எல்லை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடியை சேர்ந்தவர் கண்ணையன். இவர் தமிழக கர்நாடக எல்லையான அரக்கல்வாடி அருகே உள்ள ஒட்ரஹள்ளி என்ற கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு பிடித்து முட்டைகோஸ் பயிரிட்டுள்ளார். தோட்டம் அமைந்துள்ள பகுதி கர்நாடக மாவட்டம் சாம்ராஜ் நகர் எல்லைக்குள் வருகிறது. ஆனால் இவர் வசிப்பது தமிழக எல்லைக்குள் வரும் தாளவாடி.
ரூ.4 லட்சம் செலவு
நில குத்தகை தொகை, கூலி உள்ளிட்ட பல்வேறு செலவுகளை கணக்கிட்டு பார்த்தால் 100 டன் முட்டைகோஸை சாகுபடி செய்ய ரூ.4 லட்சம் வரை அவர் செலவு செய்திருக்கிறார். அதில் 20 முதல் 25 டன் வரை முட்டைகோஸ்கள் செடியிலேயே கெட்டுபோய்விட்டன. தற்போது 45 டன் முட்டைகோஸ் சாகுபடி செய்து அதனை மிகவும் சொற்ப விலைக்கு வியாபாரிகளுக்கு கொடுத்து வருகிறார். ஏற்றுக்கூலி, அறுவடை உள்ளிட்ட அனைத்து செலவுகளும் உள்ளடக்கிய நிலையில் முட்டைகோஸ் கிலோ ஒன்று ரூ.4 க்கு கொடுக்கிறார். ஆனால் அது மார்க்கெட்டிற்கு சென்று மக்களின் கைகளுக்கு செல்லும் போது ரூ.35 முதல் ரூ.40 வரை விலை நிர்ணயம் செய்து வியாபாரிகள் விற்பதாக தெரிவிக்கிறார்.
அரசு உதவ வேண்டும்
இது தொடர்பாக விவசாயி கண்ணையனை தொடர்பு கொண்டு பேசிய போது, ''ஊரடங்கு இல்லாத காலத்தில் வழக்கமாக முட்டைகோஸ் கிலோ ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்து வந்ததாகவும், இப்போது ஊரடங்கால் சந்தைப்படுத்துதலில் மிகுந்த சிரமம் உள்ளதால் வியாபாரிகள் கேட்கும் சொற்ப விலைக்கு கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார். விளை பொருட்களுக்கு அரசே நியாயமான விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து அதனை குளிர்பதனக் கிடங்குகளில் சேமிக்க வேண்டும்'' என கோரிக்கை வைக்கிறார்.
வேதனை தருகிறது
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ''இந்த இக்கட்டான காலத்தில் முட்டைக்கோஸ் மொத்தமாக கேட்டு அழைக்கும் சிலர் ரூ.2-க்கு தருவீர்களா ரூ.2.50-க்கு தருவீர்களாக என அடிமாட்டு பேரத்தில் ஈடுபடுகின்றனர். விவசாயிகளையும், அவர்களின் உழைப்பையும் கொச்சைப்படுத்தும் வகையில் இப்படி பேசும் சிலரை நினைத்தால் வேதனையாக இருக்கிறது என்றும் கூறுகிறார். அரசு தோட்டக்கலைத்துறை மூலமோ, மாவட்ட ஆட்சியர்கள் மூலமே விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய முன்வர வேண்டும் எனக் கோருகிறார்.