அதிமுக கூட போய் கேட்கலையாமே.. ஈரோட்டில் விஜயகாந்திற்கு இருக்கும் "வாய்ஸ்".. தேமுதிகவின் புது ரூட்?
ஈரோடு கிழக்கில் தனித்து போட்டியிடுவதாக தேமுதிக எடுத்த நிலைப்பாட்டிற்கு பின் முக்கியமான காரணம் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிகவை யாருமே கண்டுகொள்ளவில்லை, அதிமுக தேமுதிகவை கேட்டு இருக்கலாம், பாஜகவிடமாவது பேசி இருக்கலாம், ஆனால் யாருமே பேசவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தலில் ஒரு பக்கம் திமுக - காங்கிரஸ் கூட்டணி, அதிமுகவில் எடப்பாடி, அதிமுகவில் ஓபிஎஸ், அமமுக, நாம் தமிழர் என்று பல்வேறு கட்சிகள் தனி தனியாக களமிறங்க முடிவு செய்துள்ளன. இங்கே போட்டியிடுவது தொடர்பாக பாஜகவும் ஆலோசனை செய்து வருகிறது.
இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதேபோல் அக்கட்சியின் வேட்பாளராக ஈரோடு கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிகவின் இந்த நிலைப்பாட்டிற்கு பின் முக்கியமான காரணம் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க.. இப்போதே டவுன்லோட் செய்யுங்கள் ஒன்இந்தியா ஆப்.. ஏகப்பட்ட வசதிகள்!
பேட்டி
அவர் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜகவிற்கு சில சிறிய கட்சிகள் என்று சொல்லப்படும் கட்சிகள் ஆதரவு தருகின்றன. இதில் தவறு எதுவும் இல்லை. சில மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூட பாஜகவிற்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளனர். பாமக இந்த தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று முடிவு செய்துள்ளது. பொதுவாக அவர்கள் இடைத்தேர்தல்களில் போட்டியிட மாட்டார்கள். அதேபோல் அவர்கள் இந்த தேர்தலையும் புறக்கணித்து உள்ளனர். மற்றபடி கூட்டணி கட்சிகள், அதிமுக ஆகியவை பாஜக அலுவலகம் செல்வதை தவறாக பேச கூடாது.
அவமானம்
இதில் குறைவாக பேச எதுவும் இல்லை. இதை எல்லாம் அவமானமாக பார்க்க கூடாது. கூட்டணிக்காக மற்ற கட்சிகளின் அலுவலகம் செல்வதில் தவறு இல்லை. அதிமுகவே இதற்கு முன் 2001 தேர்தலுக்கு முன் ஜெயலலிதா இப்படி கூட்டணி கட்சி தலைவர்களின் அலுவலகங்களுக்கு சென்று இருக்கிறார். ஜெயலலிதா 1996ல் படுதோல்வி அடைந்தார். பர்கூரில் கூட ஜெயலலிதா தோல்வி அடைந்தார். அதுபோல்தான் இதுவும். எடப்பாடி இந்த முறை போகவில்லை. அவரின் ஆட்கள் போய் இருக்கிறார்கள். அவ்வளவு வித்தியாசம். ஜெயலலிதா 2001ல் சென்றார்.
பர்கூர்
அதன்பின் அவர் யாரையும் பார்க்க செல்லவில்லை. அவரை பார்க்கத்தான் வந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி எல்லோரும் ஜெயலலிதாவை பார்க்க வந்தனர். அதனால் கூட்டணிக்காக தலைவர்கள் வேறு இடங்களுக்கு செல்வதை பெருசாக பார்க்க கூடாது. ஆனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இது சிறு சஞ்சலத்தை ஏற்படுத்தி இருக்கும். தேமுதிகவை இந்த தேர்தலில் யாருமே கண்டுகொள்ளவில்லை. அதிமுக தேமுதிகவை கேட்டு இருக்கலாம். பாஜகவிடமாவது பேசி இருக்கலாம். கடந்த முறை அமமுக கூட்டணியில் தேமுதிக இருந்தது.
விஜயகாந்த்
இந்தியாவிலேயே ஈரோட்டில்தான் அதிக விஜயகாந்த் ரசிகர்கள் இருந்தனர். சந்திரகுமார் அங்கு தேமுதிக சார்பாக ஜொலிக்க கூடிய நபராக இருந்தார். இந்த நிலையில் இப்போதும் நாங்கள் பெரிய ஆள்தான். விஜய்காந்த் உடல்நிலை சரியில்லை என்றாலும் நாங்கள் பெரிய ஆள்தான். எங்களுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது என்று காட்டுவதற்காக தேமுதிக இப்படி தனித்து போட்டியிட நினைத்து இருக்கலாம். யாரையும் அணுகாமல் இருந்திருக்கலாம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம்தானே. தேமுதிகவுக்கு கொங்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் நல்ல வாக்குகள் உள்ளன.
தேமுதிக
அங்கெல்லாம் நிலைமை இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த தேர்தலில் தேமுதிக எழுச்சியாக இருக்கிறது என்று காட்டிக்கொள்ள நினைக்கிறது. தென் மாவட்டத்தில் இன்னொரு பக்கம் ஓபிஎஸ் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவில்லை. அங்கே இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தினர் சசிகலாவையே தூக்கி பிடிக்கவில்லை. சில இளைஞர்கள் அந்த பிரிவில் பாஜகவிற்கு கூட ஆதரவாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் ஓ பன்னீர்செல்வத்திற்கோ, சசிகலாவிற்கோ ஆதரவாக இருப்பதாக தெரியவில்லை. முக்குலத்தோர் பிரிவில் சில இளைஞர்கள் பாஜகவிற்கு கூட ஆதரவாக இருப்பார்கள்.
அண்ணாமலை
பாஜக மிகவும் கவனமாக காய் நகர்த்தி வருகிறது. அந்த சமூக மக்களை கவர பாஜக கவனமாக செயல்பட்டு வருகிறது. அண்ணாமலையும், ஆளுநரும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என்று. இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கில் மொத்தமாக அமைச்சர்களை திமுக களமிறக்கி உள்ளது. அமைச்சர்கள் இறங்கினால் தொண்டர்கள் உற்சாகமாக இருப்பார்கள். பணத்தை சரியாக செலவு செய்ய முடியும். இது ஒன்றும் புதிதல்ல. இதெல்லாம் இதற்கு முன்பும் நடந்து இருக்கிறது, என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.