பெயர் மாறினாலும்.. போட்டோ இல்லை.. மோடி, அண்ணாமலை எங்கே? எடப்பாடியின் முடிவிற்கு இப்படி ஒரு காரணமா?
ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் கவுண்டர் பிரிவு வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக எடப்பாடி தரப்பு பணிமனையில் இன்னும் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படங்கள் இடம்பெறவில்லை. எடப்பாடி பழனிச்சாமியின் இந்த முடிவிற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கில் பாஜகவிற்கு காத்திருக்காமல் கே. எஸ் தென்னரசை எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களின் அதிமுக அணி வேட்பளாரை அறிவித்து உள்ளது. அதோடு நேற்று புதிய கூட்டணியையும் எடப்பாடி உருவாக்கி இருந்தார்.
அதோடு பாஜகவை பற்றி கவலைப்படாமல் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியை நேற்று உருவாக்கி இருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பதிலாக இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு கிழக்கு தேர்தல்: உடைந்தது அதிமுக இபிஎஸ் அணி- பாஜக உறவு! தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி உதயம்!
கூட்டணி
நேற்று வைக்கப்பட்டு இருந்த கூட்டணிக்கு தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பெயர் வைத்தார். அதாவது காங்கிரசின் யூ.பி.ஏவில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள முற்போக்கை எடப்பாடி தனது கையில் எடுத்து உள்ளார். எடப்பாடியின் இந்த நிலைப்பாடு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டணி புகைப்படத்தில் இதில் பாஜகவை குறிப்பிடும் வகையில் பிரதமர் மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படம் இடம்பெறவில்லை. அதேபோல் பாஜகவை ஆதரிக்கும் ஜான்பாண்டியன் ஏசி சண்முகம் ஆகியோரது படங்களும் இடம்பெறவில்லை.
சர்ச்சை
இதனால் எங்கே எடப்பாடி பழனிசாமி பாஜகவை தவிர்க்கிறதோ, பாஜகவுடன் கூட்டணியை முறிக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது. முதலில் தேசிய ஜனநாயக கூட்டணி பணிமனை என்று இருந்த பெயரைத்தான் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று எடப்பாடி மாற்றினார். இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் இந்த கூட்டணி பெயர் மாற்றப்பட்டது. தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயர் நீக்கப்பட்டு புதிதாக அதிமுக தலைமையிலான கூட்டணி பணிமனை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மோதல்கள் காரணமாக பாஜக தலைவர் அண்ணாமலையும் அவசர அவசரமாக டெல்லிக்கு சென்றுள்ளார்.
சிறுபான்மையினர்
இந்த கூட்டணியின் பெயர் மீண்டும் அதிமுக தலைமையிலான கூட்டணி என்று மாற்றப்பட்டுவிட்டாலும் கூட இன்னும் மோடி, அண்ணாமலை ஆகியோர் புகைப்படம் இதில் இடம்பெறவில்லை. கூட்டணி கட்சியின் தேசிய தலைவர் என்ற முறையில் நட்டா புகைப்படமும் இடம்பெறவில்லை. இவர்களின் புகைப்படங்களை எடப்பாடி தரப்பு தவிர்த்து உள்ளது. ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள்.
மைனாரிட்டிகள்
இதில் 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் தங்கள் பக்கம் வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி இப்போது முற்போக்கு நிலைப்பாட்டை கையில் எடுத்துள்ளாரோ என்றும் என்ன தோன்றுகிறது. மைனாரிட்டிகளை கவர வேண்டும் என்பதற்காக மோடி, அண்ணாமலை புகைப்படங்களை எடப்பாடி தவிர்த்து இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதிமுக எடப்பாடி தரப்பு வட்டாரத்தில் விசாரித்ததில், பாஜக இன்னும் எங்களுடன் கூட்டணியை உறுதி செய்யவில்லை. எடப்பாடி தரப்பிற்கு இன்னும் ஆதரவை உறுதி செய்யவில்லை. அவர்கள் உறுதி செய்த பின்பே பாஜக தலைவர்களின் புகைப்படங்களை வைக்க முடியும் என்று விளக்கி உள்ளனர்.