ஏன் செல்லம்.. இப்படி நடு ரோட்டுல டான்ஸ் ஆடினா எப்படி.. வண்டியெல்லாம் போக வேண்டாமா
நடுரோட்டில் நான்கு யானைகள் நடனமாடியபடி இருந்தன.
ஈரோடு: "கண்ணுங்களா.. அப்படி ஒரு ஓரமா போய் டான்ஸ் ஆடினால்தான் என்ன.. எங்களுக்கு கொஞ்சம் ஒதுங்கி வழி விட்டால், நாங்க எங்க வேலையை பார்ப்போம் இல்லை?" அந்த யானைகளை பார்த்ததும் இப்படித்தான் தாளவாடி மக்களுக்கு சொல்ல தோன்றியது.
பொதுவாக, யானைகளோ, புலிகளோ, மான்களோ, மயில்களோ எதுவானாலும், கட்டிப்பிடித்து பிணைந்து கொண்டு விளையாடினாலும் சரி, சண்டை போட்டாலும் சரி.. எல்லாம் ஒரு அளவு தூரத்தில்தான். அதுவும் காட்டுக்குள் இருக்கிறவரைக்கும்தான்.
காட்டை விட்டுட்டு ரோட்டுக்கு வந்துவிட்டால்... பொதுமக்கள் கதி அதோகதிதான். சத்தியமங்கலம் அருகே இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
விளையாட்டு
தாளவாடி மலைப்பகுதியில் நெய்தாளபுரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு தலமலை சாலையில் 4 யானைகள் வந்துவிட்டன. அது ஒரு மெயின் ரோடு. நிறைய வண்டிகள் போய் கொண்டு இருக்கக்கூடிய பாதை. நான்கு யானைகளும் சாலையை கடந்து போகும் என்று பார்த்தால், நடுரோட்டிலேயே விளையாட்டு. அந்த பக்கமும் இந்த பக்கமும் வண்டிகள் வரிசை கட்டி நிற்கின்றன.
டான்ஸ்
எப்போது விளையாடி இந்த யானைகள் முடிப்பது என்று வாகன ஓட்டிகள் காத்து கொண்டே இருந்தனர். ஒருவழியாக விளையாட்டு முடிந்து விட்டதால், வண்டியை கிளப்ப நினைத்தார்கள். ஆனால் அதற்குமேல்தான் யானைகளின் டான்ஸ் ஆரம்பமானது.
காத்திருப்பு
மனிதர்கள் இப்படி காத்து கிடக்கிறார்களே, வண்டிகள் போகுமே, வருமே என்று எந்த நினைப்பும் இல்லை. எதை பற்றியும் யானைகள் கண்டுகொள்ளவும் இல்லை. இஷ்டத்துக்கு ரோட்டை அடைத்து கொண்டு இந்த யானைகள் அங்கிருந்தோரை அரைமணி நேரத்துக்கு மேலாக வெயிட் பண்ண வைத்துவிட்டன.
அறிவுரை
அதற்கு பிறகுதான் மெதுவாக ஆடி அசைந்து, காட்டுப்பகுதிக்குள் சென்றன. பகலிலேயே இப்படி யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வண்டியை கொஞ்சம் தூரமாக நிறுத்திவிடும்படியும், பிறகு கவனமாக செல்லும்படியும் வனத்துறையினர் பொதுமக்களுக்கு அட்வைஸ் தந்திருக்கிறார்கள்.