குறுக்கே வந்த டிடிவி.. ஓபிஎஸ் மட்டும் "இந்த" முடிவை எடுத்தா.. தேர்தலே மாறும்.. அசரடிக்கும் ஆப்ஷன்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் முக்கியமான ஆப்ஷன் ஒன்று உள்ளது. அவர் எடுக்க போகும் முடிவை பொறுத்து தேர்தல் களமே மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தற்போது பரபரப்பான கட்டத்தை அடைந்து உள்ளது. இந்த தேர்தலில் திமுக - காங்கிரஸ் ரூட் கிளியர் ஆகிவிட்டது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிட உள்ளார். ஆனால் எதிர் தரப்பில் யார் நிற்க போகிறார்கள் என்பதுதான் இன்னும் உறுதியாகவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. எங்களை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.. அண்ணாமலை பரபர பேட்டி
எதிர் தரப்பு
அதிமுக சார்பாக கண்டிப்பாக வேட்பாளரை களமிறக்குவோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். இன்னொரு பக்கம் நாங்கள்தான் உண்மையான அதிமுக. எங்கள் சார்பாகவும் வேட்பாளரை களமிறக்குவோம். இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான். அதோடு பாஜக சார்பாக வேட்பாளர் களமிறக்கப்பட்டால் அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். பாஜக தேசிய கட்சி என்பதால் பாஜக தனித்து போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு கொடுப்போம் என்று, ஓ பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார். இந்த இடைத்தேர்தலில் பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. பாஜக தொடர்ந்து இறுதி முடிவை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
அண்ணாமலை
ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலையே, ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியின் பவர் + பண பலம் இரண்டையும் சமாளிக்க வேண்டும் என்பதால், வலிமையான கட்சிதான் களமிறங்க வேண்டும். எங்கள் கூட்டணியில் வலிமையான கட்சி என்றால் அது அதிமுகதான். நாங்கள் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்போம் என்பதை விரைவில் அறிவிப்போம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இதில் முடிவு எடுக்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனால் அண்ணாமலை அதிமுகவிற்கு ஆதரவு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எடப்பாடி
இந்த தேர்தலில் பாஜக எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஆதரவு கொடுத்தால் ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலமே முடிவிற்கு வரும் வாய்ப்புகள் உள்ளன. பாஜகவே அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டுவிட்டது. அதனால் அவர்கள்தான் உண்மையான அதிமுக. ஓ பன்னீர்செல்வத்திற்கு தற்போது டெல்லி ஆதரவும் இல்லை என்று வாதம் வைக்கப்படும். இதனால் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்தின் எதிர்காலமே சூனியம் ஆகும் நிலை ஏற்படும். பாஜக எடப்பாடி அணிக்கு சப்போர்ட் செய்தால் சின்னம் எடப்பாடி அணிக்கு செல்ல அதிக சான்ஸ் உள்ளது. ஏனென்றால் எடப்பாடிக்குத்தான் அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. அதேபோல் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.
பாஜக நிலைப்பாடு
இதனால் எடப்பாடி பக்கம் பாஜக செல்லவும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி மட்டும் சென்றால் அது ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிய சிக்கலை கொடுக்கும். பாஜகவின் ஒற்றை நிலைபாட்டில் ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் ஊசல் ஆடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் ஒருவேளை பாஜக எடப்பாடியை தேர்தலில் ஆதரித்துவிட்டால், ஓ பன்னீர்செல்வம் வேட்பாளரை நிறுத்துவதற்கு பதிலாக அமமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க முன்வருவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்த தகவலில், பாஜக எடப்பாடியை ஆதரிக்கும் பட்சத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிதாக ஆப்ஷன் இல்லாமல் போய்விடும்.
ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வம் இக்கட்டான நிலைக்கு செல்ல நேரிடும். அதோடு ஈரோடு கிழக்கில் அவர் வேட்பாளரை நிறுத்தினால் அந்த வேட்பாளர் படுதோல்வி அடையவும் சான்ஸ் இருக்கிறது. இதை தடுக்க ஒரே வழிதான் இருக்கிறது. தனக்கு பாஜக ஆதரவு இல்லை என்று தெரிந்தால் அவர் டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளரை ஆதரிப்பார். ஈரோடு கிழக்கில் தேர்தலில், தானே கூட போட்டியிட வாய்ப்பு உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். அதனால் தனக்கு பாஜக ஆதரவு இல்லை என்று தெரிந்தால் அவர் டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளரை ஓபிஎஸ் ஆதரிக்க வாய்ப்பு உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. டிடிவி தினகரனும் - ஓ பன்னீர்செல்வமும் கடந்த சில காலமாக நெருங்கி வரும் நிலையில் அதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகவே தெரிகிறது.