இப்படி கூட நடக்குமா? ஆப்ரேசன் செய்த பெண்.. மீண்டும் கர்ப்பம்.. ஷாக் தரும் சத்தியமங்கலம் ஆஸ்பத்திரி!
ஈரோடு: சத்தியமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் மீண்டும் 5 மாத கர்ப்பிணியானதால் அதிர்ச்சி. கர்ப்பிணிப் பெண் குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். பனியன் கம்பெனி தொழிலாளியான இவருக்கு வைஜெயந்தி என்ற மனைவியும் நபிஷா என்ற 7 வயது பெண் குழந்தையும் தக்சிகா என்ற 4 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
இவரது மனைவி வைஜயந்திக்கு கடந்த பிப்ரவரி மாதம் உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
வயிறு உப்பிசம்
இந்நிலையில் கடந்த வாரம் வைஜயந்திக்கு வயிறு சற்று உப்பலாக இருந்ததால் மீண்டும் உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவரிடம் காட்டியபோது சிக்கன் சாப்பிட்டதால் வயிறு உப்பலாக உள்ளதாக கூறி மாத்திரை வழங்கி சாக்கு போக்கு சொல்லி திருப்பி அனுப்பியுள்ளனர்.
ஸ்கேன் எடுத்தார்
இதனால் சந்தேகமடைந்த மகேந்திரன் மனைவி வைஜெயந்தியை அழைத்துக்கொண்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் சென்று பரிசோதித்து பார்த்தபோது வைஜயந்திக்கு மீண்டும் 5 மாத கர்ப்பிணியாக இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
வாக்குவாதம்
இந்த தகவல் அறிந்த மகேந்திரன் மற்றும் வைஜெயந்தி அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று மகேந்திரன் மற்றும் வைஜெயந்தி அவரது குடும்பத்தினர் கர்ப்பிணி பெண் என உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழுடன் உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று அங்கு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் பணியாளர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
சான்றிதழ்
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகேந்திரன் மற்றும் வைஜெயந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். குடும்ப கட்டுப்பாடு செய்ததற்கான சான்றிதழ் வழங்கிய நிலையில் சரிவர அறுவைசிகிச்சை செய்யவில்லையா என கேள்வி எழுப்பினர்.
பொதுமக்கள் கேள்வி
இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவ அலுவலர் மகேந்திரன் மற்றும் வைஜெயந்தி குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் மீண்டும் கர்ப்பிணியான சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு அரசு மருத்துவமனைகளில் சரியான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.