வேற வேற சாதி.. மனசார காதலித்து திருமணமும் செய்து.. 3 மாசம் கூட ஆகலை.. ஆளுக்கொரு ரூமில்!
இளம் ஜோடி தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் ஈரோடு அருகே நடந்துள்ளது
ஈரோடு: வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள்.. ஒருத்தரை ஒருத்தர் விரும்பியே கல்யாணம் செய்து கொண்டார்கள்.. ஆனால் 3 மாசம் கூட ஆகவில்லை.. ஆளுக்கு ஒரு ரூமில் தூக்கில் தொங்கிவிட்டனர்.
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த ஆப்பக்கூடல், மல்லியூரைச் சேர்ந்தவர் இளங்கோ.. 23 வயதாகிறது.. இவர் ரம்யா என்ற பெண்ணை காதலித்தார்.. அந்த பெண்ணுக்கும் 23 வயதாகிறது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள தோக்கவாடியைச் சேர்ந்தவர் ரம்யா.. 2 பேரும், குமாரபாளையத்தில் உள்ள தனியார் காலேஜில் படிக்கும்போது காதலித்தனர்.. இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. எனினும், பெற்றோர் சம்மதத்துடன், 3 மாதங்களுக்கு 2 பேரும் கல்யாணம் செய்து கொண்டனர்.
மல்லியூரில் இளங்கோ வீட்டு பக்கத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.... இளங்கோ ஒரு டிவி ஷோ ரூமில் வேலை பார்க்கிறார்.. இந்நிலையில், வேலை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்தார் இளங்கோ.. அப்போது கதவை திறந்தவுடனேயே ரம்யாவின் சடலம் வீட்டிற்குள் தொங்கி கொண்டிருந்தது.
அதை பார்த்து அலறி துடித்த இளங்கோ, துக்கம் தாங்காமல் அவரும் தூக்கு போட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனிடையே தம்பதி இருவரும் வீட்டிற்குள் இருந்து வெளியே வராததை கண்ட இளங்கோ பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும், கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போதுதான் ஆளுக்கு ஒரு பக்கம் தூக்கில் சடலமாக கிடப்பதை கண்டு கதறி துடித்தனர்.. உடனடியாக ஆப்பக்கூடல் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.. விரைந்து வந்த போலீசார் 2 பேரின் சடலத்தையும் கைப்பற்றி அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். இருவரும் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று உடனடியாக தெரியவில்லை.
இது சம்பந்தமான விசாரணை நடக்கிறது.. கல்யாணம் ஆகி 3 மாதமே ஆவதால், ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது.. இவர்கள் காதலித்து கல்யாணம் செய்து கொண்டாலும், அடிக்கடி 2 பேருக்கும் சின்ன சின்ன சண்டைகள் வந்து போகுமாம்.. ஒருவேளை அதன் காரணமாகவும் இந்த தற்கொலை நடந்திருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.