துரோகம் செய்து விட்டேன்.. மன்னித்து விடு.. காதலிக்கு கடிதம் எழுதி விட்டு இளைஞர் தற்கொலை
தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஈரோடு: "உனக்கு துரோகம் செய்துவிட்டேன்.. மன்னித்துவிடு.. அடுத்த ஜென்மத்தில் உனக்கு குழந்தையாக நான் பிறக்கணும்" என்று காதலிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஈரோடு அருகே காலிங்கராயன் வாய்க்கால் மேம்பாலத்திற்கு அருகே செல்லும் தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து உடனடியாக போலீசார் அங்கு சென்றபோது, இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். தலை துண்டிக்கப்பட்டு கிடந்தது. 35 வயதிருக்கும்.
வெள்ளை கலர் பேன்ட், கருப்பு கலர் சட்டை அணிந்திருந்தார். தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட அந்த நபர் யார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அதனால் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பாக்கெட்டில் இருந்த ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர். அது காதலிக்கு இளைஞர் எழுதிய கடிதம் ஆகும்.
அதில், "உனக்கு துரோகம் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு. அடுத்த ஜென்மத்தில் உனக்கு குழந்தையாக பிறப்பேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அம்மா என்னை மன்னித்துவிடு" என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் தற்கொலை செய்து கொண்டவர் யார், என்ன விவரம் என்ற விசாரணையில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.