மதுபோதையில் ஆற்றில் குதித்த இளைஞர்.. மின்னல் வேகத்தில் உயிரை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டு
ஈரோடு : சத்தியமங்கலம் அருகே அதிக மதுபோதையில் ஆற்றில் குதித்த இளைஞரை உயிரை பணயம் வைத்து காப்பற்றிய சிறுவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அதிக அளவில் இருக்கும் மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெயராமன். மதுபோதைக்கு அடிமையான இவர் சத்தியமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார். அவர் மிகவும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.
ஆற்றில் குதித்த இளைஞர்
இதனை தொடர்ந்து ஜெயராமன் தள்ளாடிய நிலையில் உச்சக்கட்ட மதுபோதையில் சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்திற்கு வந்துள்ளார். தனது குடும்பத்தில் உள்ளவர்களை மிரட்டும் நோக்கத்தில் திடீரென பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார். கீழே குதித்த அவர் அங்கிருந்த மரக்கிளையில் சிக்கி தவித்து உள்ளார். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிலர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதிவேகமாக காப்பாற்றினார்கள்
உடனடியாக அவர்கள் சத்தியமங்கலம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் தீயணைப்புத்துறையினர் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் உட்பட 2 பேர் தங்களது உயிரை பணயம் வைத்து ஜெயராமனை உடனடியாக மீட்டு ஆற்றங்கரைக்கு கொண்டு வந்தனர்.
குவியும் பாராட்டு
''ஆற்றில் இருந்து கீழே குதித்து விட்டோம்'' என்பது கூட தெரியாமல் மதுபோதையில் இருந்த இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.இளைஞரை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சிறுவன் உட்பட 2 பேருக்கு பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தால் கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பொதுமக்கள் கோரிக்கை இதுதான்
தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மதுபோதையில்தான் இதனை செய்கின்றனர். எனவே குற்றங்களுக்கு முதல் காரணமாக மதுபானம் உள்ளது. ஆகவே அதிக அளவில் இருக்கும் மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.