கிருஷ்ணகிரியில் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர விபத்து.. சாலையில் நடந்து சென்ற 3 பேர் பலி!
ஓசூர்: கிருஷ்ணகிரியில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாயினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் இன்று காலை 5 மணிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சுண்டகிரி அருகே கோனேரிபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது நடுவில் இருந்த சாலை தடுப்பில் மோதியது.
இந்நிலையில் ஓசூரில் இருந்து சேலம் நோக்கி செல்வதற்காக பின்னால் வந்த மற்றொரு அரசுப் பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு மெதுவாக சென்றது. அப்போது பேருந்துக்கு பின்னால் அசுர வேகத்தில் வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்தில் இருந்து இறங்கி சென்றவர்கள் மீது மோதியது.
இதில் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண் குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். 3 பேரை பலிவாங்கிய அந்த லாரி தொடர்ந்து பேருந்து மீதும் மோதி கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.