கபடி விளையாடிய 10ம் வகுப்பு மாணவி.. அப்படியே சரிந்து விழுந்து மரணம்.. ஹார்ட் அட்டாக்காம்.. சோகம்
கபடி விளையாடிய ஒரு மாணவி திடீரென மயங்கி விழுந்தார். மாணவிகள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தும் அவர் எழவில்லை.
ஓசூர்: கபடி விளையாடிக் கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவி திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் இளம் வயதினர் இடையே மாரடைப்பு அதிகரித்து வரும் சூழலில், இந்த சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயது மாரடைப்புக்கு வாழ்வியல் முறையில் ஏற்பட்ட மாற்றங்களும், மன அழுத்தங்களும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் சமீபகாலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் மத்தியில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.
டீ வாங்க பள்ளி மாணவர்களை ஏவிய ஆசிரியர்கள்.. கிருஷ்ணகிரியில் சாட்டையை சுழற்றிய மக்கள்.. என்னாச்சு?
அதிகரிக்கும் மாரடைப்பு
இந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இளம் வயதினர் மத்தியில் இந்த மாரடைப்பு அதிகரித்திருக்கிறது. மணமேடையில் இருந்த மணமகன் மாரடைப்பால் உயிரிழப்பது; நடனம் ஆடிய இளைஞர் மாரடைப்பால் மரணம் அடைவது போன்ற செய்திகள் அன்றாடம் கேட்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டன. திடீரென இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு அதிகரித்ததற்கான காரணம் தெரியாமல், மருத்துவ உலகமே திணறி வருகிறது. இதுபோன்ற சூழலில், மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்திருக்கிறது.
கபடி விளையாட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இன்று காலை விளையாட்டு பீரியட் என்பதால் அங்குள்ள 10-ம் வகுப்பு மாணவிகள் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருதரப்பு மாணவிகள் அங்கு கபடி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாணவி திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள், அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். எனினும் அவர் எழவில்லை.
மாரடைப்பு
தகவலறிந்து வந்த ஆசிரியர்கள் மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, மாணவிகளும் ஆசிரியர்களும் கதறி அழுதனர். பின்னர், மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி..
இதனிடையே, பெங்களூரை சேர்ந்த சங்கீதா (19) என்ற கல்லூரி மாணவி நேற்று தனது தோழிகளுடன் கபடி விளையாடிய போது மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இளம் வயது மாரடைப்புகளுக்கு கொரோனா தடுப்பூசிகளே காரணம் என ஒருதரப்பு மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக, பிரிட்டனை சேர்ந்த இதய மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா, கோவிஷீல்டு தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் என அண்மையில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.