30 அடி ஆழ கிணறு.. உள்ளே விழுந்த யானை.. மீண்டு வந்து "டொய்ங் டொய்ங்" என நடந்து போனது!
Recommended Video
ஓசூர்: ஒசூர் அருகே 30 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த காட்டுயானை நீண்ட நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினரால் மீட்கப்பட்டது.
ஒசூர் அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதியை ஒட்டியுள்ள உப்புபள்ளம் கிராமத்தில் உள்ள 30 அடி ஆழ விவசாய கிணற்றில் 8 வயது ஆண் காட்டுயானை ஒன்று தவறி விழுந்தது. இரவு முழுவதும் கிணற்றில் தவித்து வந்த அந்த காட்டுயானையை வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர்.
இடப்பெயர்ச்சி காலம் துவங்கி உள்ளதால் தளி, ஜவளகிரி, தேன்கனிகோட்டை, ஊடேதுர்க்கம் மற்றும் சானமாவு ஆகிய வனப்பகுதிகளில் காட்டுயானைகள் கூட்டம் பல்வேறு குழுக்களாக தஞ்சமடைந்துள்ளது. இந்த காட்டுயானைகள் கூட்டம் உணவு மற்றும் தண்ணீரை தேடி அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களின் அருகே படையெடுத்து வருகிறது.
[கோவை ஏடிஎம்களில் பணம் இல்லை.. குறட்டை விட்டு ஹாயாக தூங்கிய குடிகாரரால் பரபரப்பு!]
இந்த நிலையில் நேற்று இரவு ஊடேதுர்க்கம் வனப்பகுதியிலிருந்து காட்டுயானைகள் கூட்டம் வரகானப்பள்ளி, உப்பு பள்ளம் ஆகிய கிராமங்களில் சுற்றியுள்ளன. இந்த காட்டுயானைகள் கூட்டத்தில் வந்த 8 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை ஒன்று உப்புபள்ளம் கிராமத்தில் பாப்பன்னா என்ற விவசாயியிக்கு சொந்தமான 30அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
தண்ணீர் இல்லாத அந்த கிணற்றில் இரவு முழுவதும் காட்டுயானை தவித்து வந்துள்ளது. இதனையடுத்து காலையில் தகவல் அறிந்த கிராமத்தினர் இராயக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கிணற்றில் விழுந்து தவித்த காட்டுயானையை மீட்பதற்கான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டனர்.
கிணற்றின் அருகே ஜேசிபி இயந்திரத்தின் உதவியால் பள்ளம் தோண்டி நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கிணற்றில் தவித்த காட்டுயானையை வனத்துறையினர் மீட்டனர். இதனையடுத்து காட்டுயானை ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குள் சென்றது. காட்டுயானையை பார்க்க ஏராளமான சுற்றுப்புற கிராமமக்கள் அங்கு குவிந்ததால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
கிணற்றிலிருந்து மீண்ட யானை "டொய்ங் டொய்ங்" என்று ஆடிக் கொண்டே தனது கூட்டத்தினை நோக்கி அசைந்து அசைந்து ஓடியதைப் பார்த்து மக்கள் கூட்டம் மகிழ்ச்சி அடைந்தது.