எருது விடும் விழாவிற்கு தடை.. ஓசூர் அருகே சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் மறியல்.. டிராபிக் ஜாம்
எருது விடும் விழாவிற்கு தடை விதித்ததை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் மறியல் செய்ததால் பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
ஓசூர்: எருது விடும் விழாவிற்கு தடை விதித்ததை கண்டித்து ஓசூர் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மறியலில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பேருந்துகள், போலீஸ் வாகன கண்ணாடியை உடைத்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இதனிடையே ஓசூர் அருகே ஆவலப்பள்ளியில் சப்ளம்மா கோவில் விழா மற்றும் பொங்கல் விழாவையொட்டி நேற்று எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.
எருது விடும் விழாவுக்காக அந்த பகுதியில் உள்ள காலி இடத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஆனால், எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் விழாக்குழுவினர் முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து எருது விடும் விழாவுக்கு போலீசார் தடை விதித்தனர்.
மேலும் நீதிமன்ற உத்தரவுபடி, விழா நடத்த காப்பீடு செய்த பின்னர் உரிய அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்பதால், நேற்று நடைபெற இருந்த எருது விடும் விழா, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் விழாவை காண ஆர்வமாக இருந்த பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் அங்கு வந்து ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ஓசூர் அட்கோ போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே ஓசூர் அருகே கோபசத்திரம் பகுதியில் எருதுவிடும் விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மறியலில் ஈடுப்பட்டனர். மறியல் போராட்டத்தை அடுத்து எருது விடும் விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில் மறியலை கைவிட மறுத்த இளைஞர்கள் மாவட்டம் முழுவதும் எருது விடும் விழாவிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஓசூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் பேருந்துகள், போலீஸ் வாகன கண்ணாடியை கற்களை வீசி தாக்கி உடைத்தனர். வாகனங்களை சேதப்படுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தண்ணீர் பீய்ச்சியும் மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். காலை 9 மணி முதல் மறியல் போராட்டம் நடைபெற்றதால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக நிலைமை சீரானது. ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 15 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் காலை நேரத்தில் அலுவலகத்திற்கு கிளம்பியவர்கள் பாதிக்கப்பட்டனர். பிற்பகலுக்கு மேல் நிலைமை சீரடைந்தது. போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
எருது விடும் விழா தடை.. அண்ணாமலை கோபம்.. தமிழர்கள் கலாசாரங்களை தடுப்பதாக கொந்தளிப்பு