ஒசூரில் 10 பேருடன் சென்று வேட்புமனு- சர்ச்சையில் சிக்கிய பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி
ஒசூர்: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி ஜோதி, ஒசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 10 பேருடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அன்றே ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சை, உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில் பேருந்து மீது கல்வீசிய வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஒசூர் எம்எல்ஏ பதவியை இழந்தார். எனவே ஓசூர் தொகுதிக்கும் சேர்த்துதான் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திமுக-வின் தேர்தல் வியூகம்.. 1,000 மகளிர் குழுக்கள் அமைப்பு... வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
ஒசூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக ஒசூர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி ஜோதி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், தனது கணவரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி, பா.ம.க. தொகுதி பொறுப்பாளர் அருண்ராஜன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தனது வேட்பு மனுவை ஒசூர் தொகுதி தேர்தல் அலுவலர் விமல்ராஜுவிடம் கடந்த 25ம் தேதி தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் உடன் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. ஆனால் ஒசூர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி ஜோதி மனுதாக்கல் செய்தபோது 10 பேர் உடனிருந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் ஜோதி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதையடுத்து ஜோதி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.