முனியம்மாளை கொன்னுட்டு.. ஆத்துல இறங்கி குளியலும் போட்டாச்சு.. திரண்டு வந்த பேரண்டப்பள்ளி மக்கள்!
காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் முயன்று வருகிறார்கள்.
Recommended Video
ஓசூர்: முனியம்மாளையும் கொன்றுவிட்டு.. ஆத்துல இறங்கி ஒரு குளியலும் போட்டாச்சு.. எல்லாம் அந்த 2 யானைகள்தான்!
ஓசூர் அருகே வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் பேரண்டப்பள்ளி பகுதிக்கு வந்துவிட்டது. முகாமிட்டிருந்த 2 யானைகளை கடந்த சில நாட்களாக பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் போராடி வருகின்றனர். ஆனால் யானைகள் அசரலையே.
அதனால் வனத்துறைக்கு தொடர் பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது. இந்த 2 யானைகள்தான் சில தினங்களுக்கு முன்பு முனியம்மாள் என்கிற ஒரு பாட்டியை மிதித்தே கொன்றவை. இந்நிலையில், இவை இரண்டும் இன்று காலை கெலவரப்பள்ளி அணைக்கு வந்தன. அப்படியே ஆற்றில் இறங்கி ஒரு ஆனந்த குளியலும் போட்டன.
தகவல் அறிந்த சூளகிரி வனச்சரக வன அலுவலர்கள் விரைந்து வந்தனர். திரும்பவும் காட்டுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகளை பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். யானைகள் இப்படி குளிப்பதை பார்க்க அந்த பகுதி மக்கள் நீர்தேக்க பகுதிக்கு வந்துவிட்டனர்.
யானைகளை விட பொதுமக்களை கட்டுப்படுத்துவதுதான் வனத்துறைக்கு பெரிய சவாலாக உள்ளதாம். யானைகளை விரட்ட ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அணையை ஒட்டிய பகுதிக்கு யாரும் போக வேண்டாம் என்றும், வண்டிகளில் போவோர் ஜாக்கிரதையாக போக வேண்டும் என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள்.