பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்... ஓசூர் அருகே துணிகரம்
Recommended Video
ஓசூர்: ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை, கொடூரமான முறையில் இழுத்து, பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கணவருடன், பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பல்சர் வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை பறிக்க முயன்றனர்.
இதில், நிலைகுலைந்து போன அந்த தம்பதியினர் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்ற போது, இருக்கமாக பிடித்துக் கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த கொள்ளையன், சிறிது தூரம் தரதரவென இழுத்துச் சென்றனர். இதில், அந்த பெண்ணுக்கு, முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டது.
அந்தவழியாக சென்றவர்கள், கணவன், மனைவியை மீட்டு சாலையோரமாக அமர வைத்தனர். உடனடியாக இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நகருக்குள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டால், சிசிடிவி காட்சிகளை வைத்து அடையாளம் கண்டுவிடுவதால், தேசியநெடுஞ்சாலைகளில் செல்வோரை நோட்டமிட்டு, வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதே போல், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் வழிப்பறி செய்து, தப்பமுயன்ற, பெங்களூரு எடியூர் பகுதியை சேர்ந்த சேசாங்க் (23) என்ற பலே கொள்ளையனை, கடும் மோதலுக்கு பிறகு போலீசார் சுட்டுப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.