ஒசூரில் அசத்தல்.. ஆன்லைனில் கம்ப்ளைன்ட் கொடுத்தால் போதும்.. போலீசே வீட்டுக்கு வரும்
ஒசூர்: ஓசூர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தால், புகார் கொடுத்தவரின் வீட்டிற்கே போலீஸார் நேரடியாக சென்று விசாரிக்கும் நடைமுறை இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக, மற்றும் இணையவழியில் பெறப்படும் புகார்கள் அனைத்தையும் புகார்தாரரின் இல்லத்திற்கே நேரடியாக சென்று விசாரிக்கும் முறையை, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவின் பெயரில், ஓசூர் டிஎஸ்பி முரளி ஆலோசனைப்படி சிப்காட் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க இணையம் மற்றும் நேரடியாக பெறப்படும் புகார்கள் மீது சம்பவயிடத்திற்கே சென்று விசாரிக்கும் நடைமுறையை தமிழக காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள மூக்காண்டப்பள்ளி அருகே ஸ்ரீநகரில் வசித்து வரும் நாகராஜ் மகன் செந்தில்குமார் (28). இவருக்கு சொந்தமான நிலத்தை, மத்தம் அக்ராஹரம் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணா ரெட்டி என்பவர் ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடி வருகிறார், அதனை கேட்க சென்றால் என்னிடம் சண்டை போடுகிறார், எனது நிலத்தின் பத்திரம், பட்டா, சிட்டா மற்றும் அடங்கள் என் பெயரில் சரியாக உள்ளது, சிப்காட் காவல் ஆய்வாளர் எனது புகாரை விசாரித்து, எனக்கு சொந்தமான நிலத்தினை எனக்குப் மீட்டு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், என்று இன்று சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சிப்காட் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் நேரடியாக சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு இருதரப்பினரையும் நேரடியாக வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி மேலும் இரு தரப்பினரின் ஆவணங்களை சரிபார்த்து விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில், சம்பந்தப்பட்ட நிலத்தை தங்கள் பத்திரத்தில் உள்ளபடி அரசு நில அளவையரை வைத்து அளந்துகொண்டு, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சரியாக பிரித்து எடுத்துக் கொள்வதாகவும் மேலும் இது தொடர்பாக எந்த ஒரு சண்டையிலும் ஈடுபடுவதில்லை இல்லை என இரு தரப்பினரும் சமாதானமாக சிப்காட் காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய சிப்காட் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் புகாரின் அடிப்படையில் பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைத்ததை வரவேற்று இரு தரப்பினரும் சிப்காட் காவல்துறை ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்தனர்.
இதேபோல ராணி (48) என்பவர் ஓசூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், தனது மருமகள் விஜயலட்சுமிக்கு (32) அரசுத்துறையில் சத்துணவு அமைப்பாளர் பணி வாங்கித் தருவதாக கூறி , ஓசூர் அப்பாவு நகர் பகுதியை சேர்ந்த கணேசன் இவர் ஓசூர் போக்குவரத்து பணிமனையின் உணவு விடுதியில் பணி செய்து ஓய்வு பெற்றவர் அவர், கணேஷ் தன்னிடம் 220000 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு வேலையும் பெற்றுத் தரவில்லை, நீண்டநாட்களாக வாங்கிய பணத்தை திருப்பி தரவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
புகார் மனுதாரர் ராணியுடன் காவல் ஆய்வாளர் லட்சுமண்தாஸ் ஓசூர் அப்பாவு நகருக்கு நேரடியாக சென்று ஓய்வு பெற்ற முன்னாள் போக்குவரத்து ஊழியர் கணேஷ் என்பவரிடம் விசாரணையை நடத்தியதில் அவர், பணம் பெற்றுக் கொண்டது உறுதியானது இதை தொடர்ந்து பெற்றுக்கொண்ட பணத்தை ஒருமாதத்திற்குள்ளாக திருப்பி தருவதாக எழுத்து பூர்வ உத்திரவாதம் வழங்கியதை தொடர்ந்து விசாரணையை முடித்து வைத்தார்.
கொரோனா காலத்தில் இவ்வாறான விசாரணை பயனுள்ள முறையில் இருப்பதாக பொதுமக்களும், காவல்துறையினரும் தெரிவித்தனர், இது பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.