ஓசூர் தனியார் நிதி நிறுவனத்தில் கெத்தாக திருடிய கொள்ளையர்கள்.. கொத்தாக மாட்டவைத்த ஜிபிஎஸ் சிப்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் இயங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 25 கிலோ தங்க நகைகள் உள்பட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற கொள்ளையர்கள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிடிபட்டுள்ளனர். அவர்கள் திருடி செல்லும் போது நகைகள் வைத்திருந்த பையுடன் சேர்த்து தூக்கி சென்றதால், அதில் இருந்த ஜிபிஎஸ் கருவியால் மொத்தமாக சிக்கிக்கொண்டுள்ளனர்.
Recommended Video
வெறும் 18 மணி நேரத்தில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளை போன நகைகளை , பணத்தை மீட்ட தனிப்படை போலீசார், வடநாட்டு கொள்ளை கும்பலை தெலுங்கானா போலீசாரின் உதவியுடன் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியைச் சேர்ந்த பலரும் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று உள்ளார்கள்.
பிளாஸ்திரி ஒட்டினர்
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்தபடி 7 கொள்ளையர்கள் வந்தனர்.கையில் துப்பாக்கி, அரிவாளர் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருந்த அவர்கள் திடீரென ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரையும் துப்பாக்கியை காட்டி அமர வைத்து, சத்தம் போடாமல் இருக்க வாயை பிளாஸ்திரியால் ஒட்டினார்கள்.
25 கிலோ தங்கம்
பின்னர் ஊழியர்களை தாக்கி சாவியை வாங்கி பாதுகாப்பு பெட்டகஙகளில் இருந்த 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ (25 ஆயிரத்து 91 கிராம்) தங்க நகைகள், ரூ.93 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 செல்போன், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை கொள்ளையடித்து கொண்டு இருசக்கர வாகனங்களில் தப்பினர்.
போலீசார் விசாரணை
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் கொள்ளை நடந்த நிதி நிறுவனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது.
செல்போன் பேச்சு
கொள்ளையர்கள் நிதிநிறுவனத்தில் இருந்து நகைகளை எடுத்து சென்ற பைகளில் இருந்த ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டிருந்தது. இதன் மூலம்கொள்ளையர்கள் ஓசூர் அருகே கர்நாடக மாநிலம் ஆனேக்கல் வழியாக தப்பி சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதனிடையே கொள்ளையர்கள் நிதிநிறுவனத்தில் இருந்து எடுத்து சென்ற மேலாளர் சீனிவாச ராகவாவின் செல்போன் மூலமாக யாரிடம் பேசினார்கள் என்றும் பார்த்தார்கள். சிப் மற்றும் செல்போன் பேச்சு ஆகியவற்றின் மூலம் கொள்ளையர்கள் தெலுங்கானா நோக்கி செல்வது தெரியவந்தது.
கண்டெய்ணரில் சுரங்கம்
இதையடுத்து தெலுங்கானா போலீசாரிடம் தமிழக போலீசார் உதவி கேட்டனர். கொள்ளையர்கள் தப்பி செல்வது குறித்து ஜிபிஎஸ் சிப் தகவலை பகிர்ந்தனர். தெலுங்கானா போலீசார் ஜிபிஎஸ் லொக்கேசனை பார்த்த போது அது ஒரு கண்டெய்னர் லாரி மற்றும் டாடா சுவோவை காட்டியது. இதையடுத்து ஹைதரபாத் அருகே ஷம்ஷாபாத் சுங்கச்சாவடி அருகில் கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்தனர். ஆனால் அதில் டிரைவரை தவிர யாரும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், ரகசிய அறைவைத்து அதில் 4 பேரும். பின்னால் வந்த சுமோவில் 3 பேரும் இருப்பது தெரியவந்தது. கொள்ளையர்களை சைபராபாத் போலீசார் அதிகாலை 4.30 மணிக்கு சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து கொள்ளையர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
வடமாநில கொள்ளையர்கள்
விசாரணையில், கொள்ளையர்கள் யார், எந்த ஊர் எந்த தகவல் வெளியானது. அவர்களின் விவரம் வருமாறு: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரூப் சிங் பாகல் (வயது 22), சங்கர் சிங் பாகல் (36), பவன் குமார் விஸ்வகர்மா (22), ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தை சேர்ந்த பூபேந்தர் மஞ்சி (24), விவேக் மண்டல் (32), உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்த டேக் ராம் (55), ராஜீவ் குமார் (35) ஆகியோர்தான் கொள்ளையை நிகழ்த்தியவர்கள் என்பது தெரியவந்தது.
ஒருவர் தப்பி ஓட்டம்
கொள்ளையர்களிடம் இருந்து 25 கிலோ தங்க நகைகள், 7 துப்பாக்கிகள், 97 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கன்டெய்னர் லாரி, ஒரு டாடா சுமோ கார், 13 செல்போன்கள், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமித் என்கிற விவேக் சுக்லா என்பவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஓசூர் கொண்டுவர நடவடிக்கை
கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை பொருட்களுடன் ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல திட்டமிட்ட நிலையில் ஜிப்பால் மாட்டி உள்ளனர். கைதான கொள்ளையர்களை ஓசூர் கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நகை கொள்ளை சம்பவம் நடந்த 18 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா போலீஸ்
நகை கொள்ளையர்கள் பிடிபட்டது பற்றி தெலுங்கானா மாநிலம் சைபராபாத் மாநகர போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனார் கூறுகையில், நகைகள் இருந்த பைகளில் ஜி.பி.எஸ். கருவி இருந்தது. கொள்ளையர்கள் அதை பிரிக்காமல் எடுத்து வந்தனர். அதன் மூலம் கொள்ளையர்கள் வரும் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்தோம் என்றார்.