ஓசூர் முத்தூட் பைனான்ஸ் கொள்ளை.. அடித்து, சாவியை பிடுங்கி.. சினிமாவை மிஞ்சும் CCTV காட்சிகள்!
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் இயங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 25 கிலோ தங்க நகைகள், ரொக்க பணம் உள்பட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சிசிசிடி காட்சிகள் வெளியாகி உள்ளது. சினிமா பாணியில் கொள்ளையர்கள், நிதி நிறுவன ஊழியர்களை அடித்து மிரட்டி உட்கார வைத்து திருடி உள்ளார்கள்.
Recommended Video
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சிக்கிய 7 கொள்ளையர்களிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகை வைத்திருந்த பையில்இருந்த ஜிபிஎஸ் கருவியால் மொத்தமாக சிக்கி இருக்கிறார்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியைச் சேர்ந்த பலரும் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று உள்ளார்கள்
துப்பாக்கி காட்டி மிரட்டல்
கடந்த 22ம் தேதி காலை 10.30 மணிக்கு ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்தபடி 7 கொள்ளையர்கள் வந்துள்ளார்கள். காவலாளியிடம் துப்பாக்கி இல்லை என்பதை நோட்டமிட்டுவிட்டுதான் கொள்ளையர்கள் அங்கு வந்துள்ளார்கள். கையில் துப்பாக்கி, அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருந்த அவர்கள் திடீரென காவலரை துப்பாக்கி முனையில் பிடித்து பின்னர், நிதி நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டினார்கள்.
அடித்து சாவியை பிடுங்கினர்
பின்னர் ஒரு இடத்தில் அமர வைத்து, சத்தம் போடாமல் இருக்க வாயை பிளாஸ்திரியால் ஒட்டினார்கள். சாவியை தர மறுத்த ஊழியர்களை அடித்து துன்புறுத்திய அவர்கள், கொன்றுவிடுவோம் என மிரட்டி உள்ளார்கள். இதனால் பயந்து போன ஊழியர்கள் சாவியை கொடுத்துள்ளார்கள்.
நகை கொள்ளை
பின்னர் பாதுகாப்பு பெட்டகங்களின் சாவியை வாங்கி அதில் இருந்த 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ (25 ஆயிரத்து 91 கிராம்) தங்க நகைகள், ரூ.93 ஆயிரம் ரொக்கம் போன்றவற்றை கொள்ளை அடித்தனர். அத்துடன் நிதிநிறுவன மேலாளரின் செல்போனை பறித்ததுடன், அங்கிருந்தவர்களின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை கொள்ளையடித்து கொண்டு இருசக்கர வாகனங்களில் தப்பி உள்ளார்கள். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சிக்கிய கொள்ளையர்கள்
இந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையர்கள18 மணி நேரத்தில் பிடித்துள்ளனர். நகைகளை எடுத்து சென்ற பைகளில் இருந்த ஜி.பி.எஸ். கருவிகளால் அவர்கள் போகும் இடம் துள்ளியமாக போலீசாருக்கு தெரிந்தது. டிராக் செய்து தெலுங்கானா போலீசாரின் உதவியுடன் கொள்ளையர்கள் 7 பேரையும் பிடித்துள்ளனர்.
தங்கம் பறிமுதல்
கொள்ளையர்களிடம் இருந்து 25 கிலோ தங்க நகைகள், 7 துப்பாக்கிகள், 97 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கன்டெய்னர் லாரி, ஒரு டாடா சுமோ கார், 13 செல்போன்கள், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் ஒசூரில் கொள்ளையர்கள் சினிமா பாணியில் நடத்திய கொள்ளை சம்பவ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.