ஒரு அஸ்தமனத்தில் ஜனித்த 7 உயிர்கள்.. மறைந்தும் வாழும் ஓசூர் சச்சிதானந்தம்!
ஓசூர்: ஓசூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு உடல் கல்வி ஆசிரியரும், விவசாயியுமான சச்சிதானந்தம் ஆறுமுகம் அனைவருக்கும் மிகப் பெரிய முன்னுதாரணமாக மாறியிருக்கிறார்.. மரணத்திற்குப் பிறகும்.
ஓசூரில் வசித்து வந்தவர் சச்சிதானந்தம். இவரது மனைவி டாக்டர் சிவகாமசுந்தரி, ஓசூர், தேவிசெட்டிப்பள்ளியில் கால்நடை உதவி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
நவம்பர் 5ம் தேதி தனது வீட்டில் மயங்கி விழுந்தார் 59 வயதான சச்சிதானந்தம். அதிக ரத்த அழுத்தமும், மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவுமே இந்த மயக்கத்திற்குக் காரணம். அவரை உடனடியாக கோவையில் உள்ள கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து அனுமதித்தனர். சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைக்கவில்லை. நவம்பர் 7ம் தேதி அவர் மூளைச் சாவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
உடல் உறுப்பு தானம் குறித்து எப்போதும் பேசி வந்தவர் சச்சிதானந்தம். இதனால் அவரது மறைவுக்குப் பின்னர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க மனைவி டாக்டர் சிவகாம சுந்தரி மற்றும் மகள் ரசிகா ஆகியோர் முடிவு செய்தனர். அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கினர்.
[போன வேலையை விட்டுட்டு இந்த ஆர்கானோ செய்த வேலையை பாருங்க.. மனதார பாராட்டுங்க!]
அதன்படி சச்சிதானந்தத்தின் கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோல் ஆகியவை தானமாக தரப்பட்டன. இதில் கல்லீரலும், சிறுநீரகங்களும் கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையீிலேயே நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது. அவரது எலும்பு, தோல் மற்றும் கண்கள் ஆகியவை கோவையில் உள்ள வேறு சில தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி அங்கு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. மொத்தம் 7 பேருக்கு சச்சிதானந்தத்தின் உறுப்பு தானத்தால் புத்துயிர் கிடைத்துள்ளதாக மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சச்சிதானந்தத்தின் குடும்பத்தினர் இந்த செய்தியை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஒருவரின் மறைவு, 7 பேருக்கு உயிர் கொடுத்துள்ளது. உறுப்பு தானத்தின் முக்கியத்துவம், அவசியத்தை உணர்வோம்.. மறைந்தும் உயிர் வாழ நாமும் உறுதி எடுப்போம்.