சக்சஸ்.. பல தடைகளை தாண்டி, கர்நாடகா எல்லைக்குள் வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்
Recommended Video
ஓசூர் : 12 நாட்களாக ஒசூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை கர்நாடக எல்லைக்குள் இன்று சென்று அடைந்தது.
பெங்களூர் நகரிலுள்ள ஈ.ஜி.புரா என்ற பகுதியில் நிறுவப்படுவதற்காக 108 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கோதண்ட ராமர் சிலை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டையில் செதுக்கப்பட்டது.
கொரக்கோட்டை மலையில் இருந்து 350 டன் எடை, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட கல் வெட்டி எடுக்கப்பட்டு, அதை வைத்து, கோதண்ட ராமரின் சிலைக்கு, முகம், கைகள் மட்டும் வடிவமைக்கப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு
பல மாதங்கள் பயணம்
இதையடுத்து, கோதண்டராமர் சிலை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், 240 டயர்கள் கொண்ட பிரமாண்ட சரக்கு லாரியில் ஏற்றி பெங்களூர் புறப்பட்டது. ஆனால், வரும் வழியில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க நேரிட்டது. சிலையின் பிரமாண்டத்தால், பல்வேறு இடங்களிலும் சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டன. கட்டிடங்கள் உடைக்கப்படும் சூழல் பல இடங்களில் எழுந்தது. இதனால் ஆங்காங்கு நிறுத்தப்பட்ட கோதண்ட ராமர் சிலைக்கு பக்தர்கள் பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
12 நாட்களுக்கு பிறகு
இவ்வாறு மெதுவாக பயணம் செய்த கோதண்ட ராமர் சிலை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி என்னுமிடத்தில் கடந்த 12 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பேரண்டப்பள்ளி தென்பெண்ணை ஆற்றின் மீது உள்ள உயர்மட்ட தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் மீது 380 டன் எடையுடைய சிலை செல்ல நெடுஞ்சாலை துறை அனுமதி மறுத்திருந்ததால், ஆற்றின் குறுக்கே தற்காலிக மண்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
ஒசூர் அருகே தாமதம்
இந்த நிலையில், தொடர் மழையாலும், கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, தற்காலிக மண்சாலை அமைக்கும் பணி தொடர்ந்து சிக்கலுக்குள்ளாகி வந்தது. ஒருவழியாக,
நேற்று சாலை அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவில் கோதண்டராமர் சிலை பேரண்டப்பள்ளியிலிருந்து தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மண்சாலையை கடந்தது.
ஒசூர் தாண்டியது
இரவு நேரங்களில் போக்குவரத்து இடையூறு இல்லை என்பதால், இரவோடு இரவாக கோதண்டராமர் சிலை ஓசூர் வழியாக தற்போது கர்நாடக எல்லையை அடைந்துள்ளது. ஓசூர் அடுத்த தர்கா என்னுமிடத்தில் அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்ட, கோதண்டராமர் சிலை, கர்நாடக எல்லைக்குள் உள்ள அத்திபெலே பகுதிக்கு, இன்று காலை 10 மணியளவில் நுழைந்தது. கர்நாடகா எல்லையான அத்திபெலே பகுதி ஏறத்தாழ பெங்களூர்தான். எனவே, இன்றே கோதண்டராமர் சிலை பெங்களூர் அடைந்துவிட்டது என்றும் சொல்லலாம்.
பெங்களூர் வந்தார் ராமர்
பல்வேறு சிக்கலுக்குள்ளாகி வந்த கோதண்டராமர் சிலை கர்நாடகாவிற்குள் வந்து அடைந்திருப்பது ஆன்மிகவாதிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்திபெலே பகுதியில் இருந்து பெங்களூர் சிட்டி பகுதி வரை இனிமேல் எப்படி கோதண்டராமர் சிலையை எடுத்துச் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இனிதான் நகர்ப்புற போக்குவரத்து நெரிசலை சிலையை ஏற்றிச் செல்லும் லாரி சந்திக்கும். ஆனால் அதற்கு மாற்று வழி வைத்திருப்பார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.