ஒசூரில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை.. கூட்டு பாலியல் தொல்லை என கணவர், நண்பர்கள் மீது புகார்
Recommended Video
ஒசூர்: ஒசூரில் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம், கடகத்தூர் கிராமம்,புதன் தெருவை சேர்ந்த கார்த்திகா (19), காளியப்பன் (23) ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஆறு மாதங்களுக்கு முன்பாக வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
ஒசூரில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று இரவு 11.30 மணியளவில் கார்த்திகாவின் உறவினர்களுக்கு தொலைப்பேசியில் தொடர்புக்கொண்ட காளியப்பனின் சகோதரர் , கார்த்திகா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
காயங்கள்
ஒசூர் அரசு மருத்துவமனையில் கார்த்திகாவின் உடலை பார்த்த உறவினர்கள், உடலில் பல்வேறு பகுதிகளில் காயங்கள் இருப்பதாகவும், கார்த்திகா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினர்.
கொடுமை
நேற்று கார்த்திகா குடியிருந்த வீட்டின் முன்பாக காளியப்பனுடன் நண்பர்கள் மது அருந்தி நீண்ட நேரம் அங்கேயே இருந்தனர். மேலும் காளியப்பனுடன் சேர்ந்து அவர்களது நண்பர்களும் கார்த்திகாவை சித்திரவதை செய்து பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி கொலை செய்திருக்கலாம்.
கொலை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை
பின்னர் கொலையை மறைக்க தூக்கில் தொங்கியதாக காளியப்பன் நாடகம் ஆடுவதாக கார்த்திகாவின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
காளியப்பன் மற்றும் அவர்களது நண்பர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஒசூர் நகர காவல் நிலையத்தில் கார்த்திகாவின் தாயார், உறவினர்கள் புகார் அளித்தனர்.
விசாரணை
கார்த்திகா - காளியப்பன் ஆகியோர் திருமணம் செய்து 6 மாதங்கள் மட்டுமே ஆகியிருப்பதால், இச்சம்பவம் குறித்து ஒசூர் கோட்டாட்சியர் விமல்ராஜ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.