துப்பாக்கியுடன் புகுந்த முகமூடி கொள்ளையர்.. ஒசூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.7 கோடி நகை கொள்ளை.. ஷாக்
கையில் துப்பாக்கிகளுடன் ஒசூர் முத்தூர் நிறுவனத்திற்குள் புகுந்த முகமூடி
ஒசூர்: முத்தூட் நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில் பயங்கர கொலை சம்பவம் ஓசூர் நகரில் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஓசூர் நகரில், பாகலூர் ரோடு பகுதியில் ஒரு பரபரப்பான பகுதியில், அமைந்துள்ளது முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை. நகைகளை வாங்கி அடமானம் வைத்துக் கொண்டு நிதியளிக்கும் பணியை செய்து வருகிறது இந்த நிறுவனம்.
இன்று காலை 9 மணி இருக்கும். வழக்கம்போல நிதி நிறுவனம் திறக்கப்பட்டு, அலுவல்களுக்கு ஊழியர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.
முகமூடி கும்பல்
இந்த நிலையில்தான் திடீரென முகமூடி அணிந்தபடி ஐந்து முதல் ஆறு பேர் அடங்கிய ஒரு கும்பல் அங்கு வந்து உள்ளது. அவர்கள் கையில் துப்பாக்கிகள் இருந்துள்ளன. வெளியே நின்ற காவலரை துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளையன் பிடித்து வைத்துக்கொண்டு மற்ற கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
துப்பாக்கி
அங்கிருந்து ஊழியர்களை பார்த்து, "அசைந்தால் சுட்டுவிடுவோம்.. யாருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடாது" என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து பைனான்ஸ் நிறுவன ஊழியரிடம், சாவியை வாங்கிக் கொண்டு, லாக்கரை திறந்துள்ளனர். அங்கு இருந்த, 3125 சவரன் தங்க நகை மற்றும் 96 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை சுருட்டி எடுத்துக் கொண்ட அந்த கும்பல், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
7 கோடி மதிப்பு
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 7 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்கு பதிவு செய்யப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா பதிவான காட்சிகளை ஆய்வு செய்கிறார்கள். அலுவலக ஊழியர்களிடம் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அண்டை மாநிலங்கள்
பகல் நேரத்தில் ஓசூர் போன்ற ஒரு தொழில் நகரத்தில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் நகரம், கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களுக்கு நெருக்கமாக அமைந்துள்ள பகுதியாகும். எனவே கொள்ளையடித்து விட்டு பிற மாநிலங்களுக்கு கொள்ளையர்கள் தப்பி ஓடி இருக்கக்கூடும் என்ற கோணத்தில் பிற மாநில எல்லைகளில் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டு வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒசூர் மக்கள் பீதி
பகல் நேரத்தில், துப்பாக்கி முனையில், சுமார் இரண்டரை கிலோ தங்க நகைகள் கொள்ளை போய் இருக்கின்ற சம்பவம் ஒசூர் நகர மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்கள் முன்பு ஒசூர் அருகே, நெடுஞ்சாலையில், செல்போன் ஏற்றிச் சென்ற லாரியை மறித்து கொள்ளையர்கள் செல்போன்களை கொள்ளையடித்தனர். எனவே ஒசூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.