காதல் ரோஜாவே.. ஓசூரிலிருந்து 1 கோடி ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி!
ஓசூர்: நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து 1 கோடி ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
காதல் என்றாலே காதலிக்கு காதலன் பரிசளிக்கும் மிக முக்கியமான ஒன்று ரோஜாப்பூக்கள்தான். ரோஜாக்களின் அழகுத் தோற்றத்துடன் காதலியை ஒப்பிட்டு அவரிடம் ரோஜா கொடுப்பதன் மூலம் அவரை இம்ப்ரஸ் செய்கின்றனர்.
1000 ஏக்கர்
அத்தகைய ரோஜாக்கள் பெங்களூர் பகுதிக்கு அருகே உள்ள ஓசூரில் உள்ள தட்பவெப்ப நிலையால் அங்கு ரோஜா உற்பத்தி அதிகமாக உள்ளது. ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி ஆகிய பகுதிகளில் 1500 ஏக்கர் பரப்பளவில் ரோஜா பயிரிடப்பட்டுள்ளன.
15 நாட்களுக்கு முன்னர்
இங்கு 30 வகையான ரோஜாக்கள் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில் நாளை காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக ஓசூரிலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ரூபாய்
இங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா பூக்கள் டெல்லி, மும்பை, பெங்களூர், ஆந்திரம், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு பூ ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்கப்படுகிறது. 15 முதல் 20 ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தின் விலை 400 ரூபாயாக உள்ளது.
ரோஜா
என்னதான் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை காதலர்கள் வாங்கிக் கொடுத்தாலும் அது ரோஜாக்களுக்கு ஈடாகாது என்பதே காதலிகளின் கருத்தாகும். மல்லிகைப்பூ என்றால் மனைவிக்கு வாங்கி கொடுப்பதை போல் ரோஜா என்றால் அது காதலிகளுக்கு வாங்கி கொடுப்பது என்ற நிலை வந்துவிட்டது. ஏன் மனைவிகளுக்கு ரோஜா வாங்கி கொடுக்கக் கூடாதா என நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது பாஸ்!