7 ஆண்டுக்கு முன்பு என் மகனை மீட்டது போல் சுஜித்தையும் மீட்க வேண்டும்.. தாய் கண்ணீர்
ஓசூர்: 7 ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல்லில் விழுந்த என் மகனை மீட்டது போல் சுஜித்தும் மீட்கப்பட வேண்டும் என தாய் பத்மா கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர் வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த போர்வெல்லில் விழுந்தார்.
அவரை 4 தினங்களாக மீட்கும் பணியில் மீட்பு படையினரும் தீயணைப்பு வீரர்களும் போராடி வருகின்றனர். குழந்தை 80 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதால் ரிக் இயந்திரம் கொண்டு துளை போடும் பணிகள் நடந்தன. இதையடுத்து அதில் பாறைகள் அதிகம் காணப்பட்டதால் போர்வெல் இயந்திரம் கொண்டு பாறைகளை உடைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு புறம் பரபரக்கும் மீட்பு பணி... மற்றொரு புறம் சுஜித் பெற்றோருக்கு கவுன்சிலிங்
7 ஆண்டுகளுக்கு முன்பு
அவர் விரைவில் மீட்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வரும் நிலையில் இதே போல் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 600 அடி ஆழத்தில் தவறி விழுந்து பத்திரமாக மீட்கப்பட்ட 2 வயது குழந்தையின் தாய், சுஜித்தும் மீட்கப்பட வேண்டும் என கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
600 அடி ஆழம்
கிருஷ்ணகிரி மாவட்டம் அகலகோட்டை அடுத்த மந்தையூரை சேர்ந்தவர் ஆனந்தன்(30), இவரது மனைவி பத்மா(26). இவர்களுக்கு பூஜா(3) என்ற பெண் குழந்தையும், குணா(2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதியில் ஆனந்தனுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்கு கடந்த 2012-ஆம் ஆண்டு 29ம் தேதி 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது.
குழந்தைகள் விளையாட்டு
இந்த ஆழ்துளை கிணறும் தோண்டும் பணி முடியும்போது நள்ளிரவு என்பதால் அதை மூடாமல் அப்படியே விட்டனர். மறுநாள் காலை பத்மா தனது இரு குழந்தைகளுடன் துணி துவைக்க விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது அங்கு குழந்தைகள் விளையாடி கொண்டிருந்த போது மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் குணா தவறி விழுந்தார்.
சுஜித்தை மீட்க பிரார்த்தனை
இதை கண்ட குழந்தையின் அக்காள் பூஜா, தனது தாயிடம் கூறியதை அடுத்து குணாவை 20 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரத்தில் உயிருடன் மீட்டனர். சுஜித்தின் பெற்றோர் பரிதவிப்பை ஏற்கெனவே அனுபவித்திருக்கும் பத்மா, தற்போது சுஜித் மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்துள்ளார்.