மன வளர்ச்சி குன்றியோர் வாழ்வில் ஒளியேற்றிய நிஹாரிகா - டயானா விருது கொடுத்த இங்கிலாந்து
மனவளர்ச்சி குன்றிய பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த அவர்களுக்கு கைத்தொழில் கற்றுக்கொடுத்த 16 வயது பள்ளி மாணவிக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் டயானா விருது வழங்கி கவுரவித்துள்ளது.
ஓசூர்: மனிதர்களாக பிறந்த சிலரால் மட்டுமே தன்னிகரில்லாத சேவைகளை செய்ய முடியும், அப்படி ஒரு சேவை மனப்பான்மை கொண்ட 16 வயதேயான பள்ளி சிறுமி நிஹாரிகாவின் சேவையை பாராட்டி பிரிட்டிஷ் அரசாங்கம் கவுரவப்படுத்தியதோடு அவருக்கு 2020ஆம் ஆண்டின் டயானா விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.
நிஹாரிகா கோபிநாத், எல்லோரையும் போல சாதாரணமான பள்ளி மாணவி அல்ல. இயலாதவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து மன வளர்ச்சி குன்றிய பெண்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அவரது சேவை உலக அளவில் பலரது உள்ளங்களை தொட்டிருக்கிறது. தான் படிக்கும் பள்ளிக்காக செய்த ஹோப் வோர்ல்ட் என்ற புராஜெக்ட்தான் இந்த சேவையை செய்ய நிஹாரிகாவை தூண்டியுள்ளது.
வாழ்க்கையே தொலைந்து போனதாக நினைத்த பல பெண்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு தையற்கலை, எம்ராய்டரி போன்றவைகளை கற்றுக்கொடுத்து வேலை வாய்ப்பையும் வருமானத்தையும் பெற்றுக்கொடுத்திருக்கிறார்.
நீங்க தான் சார் ரியல் ஹீரோ.. ஒரே நாளில் இணையத்தில் பிரபலமான காவலர்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?
ஓசூர் பள்ளி மாணவி
ஓசூர் தில்லை நகரைச் சேர்ந்த கோபிநாத், சிரிஷா தம்பதியின் மூத்த மகள்தான் நிஹாரிகா. 16 வயதாகும் இந்த பள்ளி மாணவிதான் இந்த சிறிய வயதில் ஏழை எளிய, மாற்றுத்திறனாளி, மனவளர்ச்சி குன்றிய பெண்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். இவர் கடந்த ஒராண்டாக ஹோப் வேர்ல்ட் செயல்திட்டத்தின் மூலம் பலருக்கும் நம்பிக்கையை விதைத்து வருகிறார்.
கைத்தொழில் கற்றுக்கொடுத்த நிஹாரிகா
ஓசூர் அப்பாலா மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் உள்ள 48 பெண்களுக்கு பெயிண்டிங், துணிப்பைகள் தைப்பது, அழகு பொருட்கள் செய்வது போன்ற கைத்தொழில்களை கற்றுக்கொடுத்து வருகிறார். அதே போல தொட்டமஞ்சு மலைகிராம ஏழை எளிய பெண்களுக்கும் கைத்தொழில் கற்றுக்கொடுத்து வருமானத்திற்கு வழி செய்திருக்கிறார்.
நிஹாரிகாவிற்கு விருது
நிஹாிரகாவின் சேவையை பாராட்டியுள்ள பிரிட்டிஷ் அரசாங்கம், 2020 ஆம் ஆண்டிற்கான இளவரசி டயானா விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. நிஹாரிகாவிற்கு கிடைத்துள்ள பாராட்டு கவுரவத்திற்காக பெற்றோர்களும், உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் இனிப்புகளை வழங்கி மாணவியை பாராட்டினர்.
ஐநா சபையில் பேச்சு
இதே சிறுமிதான் கடந்த டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்களைப் பற்றி பேசி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நிஹாரிகா என்றால் மில்கி வே என்று அர்த்தமாம். நிஹாரிகா அந்த பால்வீதியைப் போல நிகரில்லாதவள்தான்.