நெஞ்சில் ஆழமாக பாய்ந்த கத்தி.. 30 மணி நேரமாக போராடிய மல்லிகா.. காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை
ஒசூர்: நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் சுமார் 30 மணி நேரம் போராடிக் கொண்டு இருந்த பெண்ணின் உயிரை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றி அசத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் மல்லிகா (40). தகராறு காரணமாக, இவரை கடந்த மே 25ம் தேதி ஒருவர் கத்தியால் ஓங்கி குத்தியுள்ளார்.
இதில் ஆழமாக கத்தி பாய்ந்தது. உயிருக்கு போராடிய நிலையில், அவரை உறவினர்கள், மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் மே 26ம் தேதி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஒசூர் அம்மா உணவகங்களில், உணவுக்கான முழு செலவை ஏற்றது அதிமுக.. முதல்கட்டமாக ரூ.5 லட்சம் நிதி
சேலம் மருத்துவமனை
ஆனால், அங்குள்ள டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக, மல்லிகாவை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது நல்லது என பரிந்துரைத்தனர். கத்தியை அகற்றவில்லை. எனவே, மல்லிகா, மேல் சிகிச்சைக்காக அன்றைய தினமே, நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கோவை அரசு மருத்துவமனை
இதையடுத்து இதய அறுவை சிகிச்சைத்துறை தலைவர் பேராசிரியர் சீனிவாசன், இதய அறுவை சிகிச்சை உதவிப் பேராசிரியர்கள் அரவிந்த், மின்னத்துல்லா, மயக்கவியல் துறைத் தலைவர் பி.ஜெய்சங்கர நாராயணன், உதவிப் பேராசிரியர் மணிமொழிச்செல்வன், கோபிநாத், செவிலியர்கள் விஜயலட்சுமி, கல்பனா ஆகியோர் கொண்ட குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தது.
30 மணி நேரம்
சுமார் 30 மணி நேரம் நெஞ்சு பகுதியில் குத்தியிருந்த கத்தியை பாதுகாப்பாக அகற்றினர். இந்த நிலையில் அவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார். மிகவும் சிரமமான அறுவை சிகிச்சையிலிருந்து மல்லிகா உயிரோடு மீண்டதால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெஞ்சில் கத்தி
இதனிடையே, மல்லிகாவின் நெஞ்சில் பாய்ந்த கத்தியின் எக்ஸ்ரே படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகச்சிறப்பாக செயல்பட்டு, பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.