ஓசூரில் விவசாய தோட்டத்தில் யானை மிதித்து இருவர் பலி.. மக்கள் போராட்டம்
ஓசூர்: ஓசூர் அருகே புலியரசி கிராமத்தில் இன்று காலை விவசாய தோட்டத்திற்கு சென்ற முனிராஜ் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரை ஒற்றை காட்டுயானை தாக்கியது. இதில் முனிராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ராஜேந்திரன் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
ஓசூர் அருகேயுள்ள புலியரசி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனிராஜ் (28), ராஜேந்திரன் (41). முனிராஜ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். ராஜேந்திரன் விவசாயம் பார்த்து வந்தார்.
இவர்கள் இருவரும் இன்று அதிகாலை புலியரசி கிராமத்தை அடுத்துள்ள விவசாயத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மறைந்திருந்த ஒற்றை காட்டுயானை இருவரையும் துரத்திச் சென்று தாக்கி உள்ளது.
கிரிக்கெட்டில்தானே ஓய்வு.. 2024-இல் லோக்சபா தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்.. சுப்பிரமணியன் சுவாமி
மருத்துவமனை
இதில் முனிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேந்திரன் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து பொதுமக்கள் காயமடைந்த ராஜேந்திரனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆர்ப்பாட்டம்
இதனையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர், காட்டுயானை தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த முனிராஜ் உடலை சாலையில் வைத்து நியாயம் வேண்டி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தி வரும் காட்டுயானைகளை அந்த பகுதியில் இருந்து விரட்ட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து
இதனையடுத்து சம்பவம் குறித்து அறிந்த சூளகிரி காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நிகழ்வு இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள்
ஒரே நாளில் காட்டு யானை தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் புலியரசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் இடத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.