ஓசூரில் வாலிபர் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிப் படுகொலை .. மர்ம நபர்களுக்கு போலீசார் வலை!
ஒசூர்: ஓசூர் வசந்த நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து அட்கோ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் வசந்த நகர் 3வது குறுக்கு தெருவில் வாழ்ந்து வருபவர் லோகேஷ், இவரது வீட்டின் மேல் தளத்தில் ரகுராம் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் இன்று ரகுராமன் மனைவி வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு ஓசூர் அண்ணைநகரை சேர்ந்த பாலாஜி என்பவர் சென்றுள்ளார். அப்போது அந்தப்பகுதிக்கு வந்த 3 மர்ம நபர்கள் ரகுராமின் வீட்டின் முன்பு பாலாஜியை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
பின்னர் மூன்று பேரும் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஓசூர் அட்கோ காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து ஒசூர் டிஎஸ்பி முரளி மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
கொலையாளிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.