குழந்தைக்கு யார் மருந்து தருவது.. தம்பதிக்குள் வெடித்த தகராறு.. ரயில் முன் பாய்ந்து உயிரைவிட்ட மனைவி
ரயில் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
ஓசூர்: குழந்தைக்கு யார் மருந்து தருவது என்பதுதான் தம்பதிக்குள் சண்டை.. கடைசியில் தற்கொலை வரை இந்த விஷயம் போய்விட்டது!
ஓசூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு பெண் கைக்குழந்தையுடன் இன்று காலை வந்தார்.. அப்போது பெங்களூருவை நோக்கி மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த குழந்தையை ஒரு ஓரமாக படுக்க வைத்துவிட்டு, திடீரென அந்த ரயில் முன்பு பாய்ந்தார்.
இதில் குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. ஆனால் அப்பெண் உடல் சிதறி அங்கேயே உயிரிழந்தார். இதை கண்ட அங்கிருந்த பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் சொல்லவும் அவர்கள் விரைந்து வந்தனர்.
தண்டவாளத்தில் இருந்த கற்கள் சிதறி குழந்தையின் நெற்றியில் பட்டதால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. அதனால், குழந்தையை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், பெண்ணின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த பெண் மூக்காண்டப்பள்ளியை சேர்ந்த 25 வயது சுவேதா என்பதும், உயிர் தப்பிய 10 மாத பெண் குழந்தையின் பெயர் சுருதி லட்சுமி என்பதும் தெரியவந்துள்ளது. இப்போது குழந்தையின் நெற்றியில் கட்டு போடப்பட்டு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை, குழந்தை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் சொல்லி உள்ளனர்.
சுவேதாவின் கணவர் பெயர் முரளி.. குழந்தைக்கு யார் மருந்து தருவது என்பதில் இவர்களுக்கு நேற்றிரவு சண்டை வந்துள்ளது.. இந்த சண்டைதான் பெரிய விவகாரமாக வெடித்து, சுவேதா குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு வந்துவிட்டது. மன உளைச்சல் காரணமாக ரயில் முன் விழுந்து தற்கொலை முடிவுக்கும் சுவேதா வந்திருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தையுடன் சாகலாம் என்றுதான் முடிவெடுத்து வந்துள்ளார் ஸ்வேதா.. ஆனால் கடைசி நேரத்தில் மனம்மாறி, குழந்தை உயிரோடு இருக்கட்டும் என்று நினைத்து.. தான் மட்டும் ரயிலில் விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.