ஓடி வாங்க... ஓடி வாங்க... 10 ரூபாய்க்கு புடவை தர்ராங்க... நெரிசலில் சிக்கிய பெண்கள் மயக்கம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே 10 ரூபாய்க்கு புடவை வழங்கப்படும் என்று விளம்பரம் பார்த்து, ஏராளமானோர் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி 10 க்கும் மேற்பட்ட பெண்கள் மயங்கி விழுந்தனர்.
ஹைதராபாத் அருகேயுள்ள சித்திபேட்டையில் இயங்கி வரும் ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, சலுகை விலையில் 10 ரூபாய்க்கு புடவை வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அதிகாலை முதலே அந்த ஜவுளிக்கடைக்கு பெண்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. திருவிழா போல் கூட்டம் கூடியதால், கடை நிர்வாகம் கடையின் ஷட்டரை மூடியது. இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் கடையின் ஷட்டரை உடைத்துக் கொண்டு உள்ளே போக முயற்சி செய்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில், கூட்டத்தில் சிக்கிய 10 க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். மேலும் ஒரு பெண் வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மற்றொருவர் அணிந்திருந்த தங்க சங்கிலி ஆகியவை கூட்டத்தில் காணாமல் போனதால் அங்கு பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டி உள்ளனர்.
இதே போல், கடந்த டிசம்பர் மாதம் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே புதிதாக தொடங்கப்பட்ட துணிக் கடையில் ரூ. 10-க்கு புடவை விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரத்தை அடுத்து அக்கடை முன் அதிகாலை முதலே பெண்கள் கூட்டம் அலைமோதியது.
அப்போது, இளம்பெண்கள் முதல் வயதானவர்கள் வரை, ஆண்களும் வரிசையில் குவிந்தனர். வரிசையில் நிற்பதில் பிரச்சினை ஏற்பட்டதால் பெண்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டனர். கூட்டத்தால் டோக்கன் கொடுப்பவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.