3 கிமீக்கு பரவியது.. 5000 பேர் மயக்கம்.. 13 பேர் பலி.. விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 13 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 13 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலை மிகவும் பிரபலமானது. அங்கு இருக்கும் ஆர்ஆர் வேங்கடபுரம் கிராமத்தில் இந்த தொழிற்சாலை உள்ளது. 1961ம் ஆண்டில் இருந்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.
ஹிந்துஸ்தான் பாலிமர் என்று தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் Mc Dowell & Company Limited நிறுவனத்துடன் 1978ல் இணைக்கப்பட்டது. இங்கு பாலிமர் ரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
விசாகப்பட்டினம் கேஸ் கசிவு.. கொத்து கொத்தாக சாலையில் விழுந்த மக்கள்.. உணர்வற்ற நிலையில் குழந்தைகள்!
இன்று காலை விபத்து
இந்த நிலையில் எல்ஜி பாலிமர் தொழிற்சாலையில் இன்று அதிகாலை பெரும் வெடிப்பு சத்தத்துடன் விபத்து ஏற்பட்டது. அதிகாலை 3 மணிக்கு விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் இருந்து அதிக அளவில் புகைகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த புகை அருகில் இருக்கும் கிராமங்களுக்கு பரவ தொடங்கியது. இதற்கு அருகே நிறைய வீடுகள் உள்ளது.
|
மோசமான பாதிப்பு
இந்த நிலையில் இந்த தொழிற்சாலைக்கு அருகே இருக்கும் வீட்டில் இருந்த 13 பேர் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த நச்சுப்புகை தாக்கி சம்பவ இடத்திலேயே 13பேர் பலியானார்கள். இதில் ஒரு குழந்தை அடக்கம். அந்த இடத்தில் இருந்து அருகில் இருக்கும் கிராமங்களுக்கு எல்லாம் இந்த விஷவாயு பரவியது. மக்கள் சாலையிலேயே விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். அதிகாலை வெளியே வந்த பலர் மயங்கி விழுந்தனர்.
மூச்சு விட முடியவில்லை
இந்த புகை காரணமாக ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டவர்களை மற்றவர்களை பைக்கில், காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். கிடைக்கும் வாகனங்களில் மருத்துவமனைக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அருகாமையில் உள்ள கிராமத்தில் வசிப்பவர்கள் சுவாசிக்க முடியாமல் மயங்கி விழுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
என்ன காரணம்
இந்த விஷவாயு கசிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விபத்து எப்படி ஏற்பட்டது என்றும் தெரியவில்லை. தற்போது தீயணைப்பு படை வீரர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் தேசிய மற்றும் பேரிடர் மீட்பு படையினர் அங்கு களமிறங்கி உள்ளனர். இந்த விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து எல்ஜி பாலிமர் உற்பத்தி நிறுவனமும் விளக்கம் அளிக்கவில்லை.