150 மாணவிகளுக்கு கட்டாயப்படுத்தி முடிவெட்டிய குருகுல பள்ளி நிர்வாகம்.. காரணம் இதுக்குத்தான்!
ஹைதராபாத்: தண்ணீரை மிச்சப்படுத்துவதற்காக 150 மாணவிகளின் தலைமுடியை வெட்டிய தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளி முன்பு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கானாவில் மெதக் என்ற நகரம் உள்ளது. இங்கு அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள் பள்ளியிலேயே தங்கி படித்து வருகிறார்கள்.
உணவு இலவசம்
இந்த மாணவிகளுக்கு தங்கும் இடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் எல்லா இடங்களிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது போல் தெலுங்கானாவில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டது.
தலைமை ஆசிரியர்
ஆழ்குழாய் கிணறு வறண்டுவிட்டதால் 3 நாட்களுக்கு ஒரு முறை டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்கு செலவோ அதிகமானது. பள்ளி மாணவிகள் குளிப்பதற்கு அதிக அளவில் தண்ணீரை பயன்படுத்தி வருவதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
கிராப்
மாணவிகளின் தலைமுடி நீளமாக இருப்பதால்தான் குளிப்பதற்கு அதிக தண்ணீர் செலவு ஆவதாக கருதினார். இதையடுத்து அங்கு தங்கியிருந்த 150 மாணவிகளுக்கு தலைமுடியை குட்டையாக வெட்ட உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து மாணவிகளுக்கு ஆண்களுக்கு முடி வெட்டுவது போல் கிராப் வெட்டப்பட்டது.
போராட்டம்
இந்த நிலையில் மாணவிகளை சந்திப்பதற்காக பள்ளிக்கு பெற்றோர் சென்றிருந்தனர். அப்போது தங்கள் பெண் குழந்தைகள் முடிவெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.